ரூ.5 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்... இரு ராணுவ வீரர்கள் உள்பட மூவர் கைது
ரூ. 5 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அவற்றை வைத்திருந்ததாக இரு ராணுவ வீரர்கள் உள்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் ரூ. 5 கோடி மதிப்பிலான ஹெராயின் வைத்திருந்ததாக இரு ராணுவ வீரர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
டேராடூனில் ஒரு காரில் ஹெராயின் கடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து
போதை பொருள் தடுப்பு குழு, ராணுவ புலனாய்வு குழு , போலீஸார் அடங்கிய குழு வாகன சோதனையில் ஈடுபட்டது. அப்போது அந்த வாகனத்தில் ஒரு கிலோ எடை கொண்ட ஹெராயின் எனும் போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் மதிப்பு ரூ. 5 கோடியாகும். போதை வஸ்துகளை கடத்திய ராஜூ ஷேக், பூல் சிங் யாதவ் மற்றும் மஞ்சு ரஹ்மான் ஆகிய மூவரை போலீஸார் கைது செய்தனர். அவர்களில் ராஜுவும், பூல் சிங்கும் ராணுவ வீரர்களாவர். மற்றொருவர் ராஜுவின் உறவினர்.
இதைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்த துப்பாக்கியும், 13 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மூவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.