புது காதலனுடன் சேர்ந்து, மாஜி காதலனை கொன்ற 15 வயது சிறுமி! ஹோலி கொண்டாட்டத்தில் வெறிச்செயல்
டெல்லி: முன்னாள் காதலனை ஹோலி கொண்டாட கூப்பிட்டு காதலியும், அவரின் புது காதலனும் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு டெல்லியில் நடைபெற்ற இந்த படுபாதக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.
ஜகன்ஜிர்புரி பகுதியில் வசிக்கும் 15 வயதான சிறுமி தனது தாத்தா பாட்டியுடன் வசித்து வருகிறார். கூலி வேலை செய்யும் இந்த சிறுமியும், அதே பகுதியில் வசிக்கும் கமல் என்ற 16 வயதான சிறுவனும் காதலித்து வந்தனராம்.
கமலுடன் சில ஆண்டுகளுக்கு முன்புவரை நட்பாக இருந்த சிறுமி தற்போது வேறு ஒரு 17வயது சிறுவனுடன் நெருக்கமாக பழக தொடங்கியுள்ளார். இதை கமல் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து கமலை தீர்த்துக் கட்டிவிட்டு ஜாலியாக ஊர் சுற்ற, சிறுமி திட்டமிட்டுள்ளார்.
எனவே, புராரி பகுதிக்கு வருமாறும், அங்கு வண்ண பொடிகளை தூவி, ஹோலி கொண்டாடலாம் என்றும், கமலை, சிறுமி அழைத்துள்ளார். இதை நம்பிய கமல் சம்பவத்தன்று அங்கு சென்றுள்ளார். அப்போது, சிறுமியும், அவரின் புது காதலன் மற்றும் அவரது நண்பர்கள் 4பேர் சேர்ந்து, கமலை கத்தியால் குத்தி கொன்றனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், குற்றவாளிகள் ஆறுபேரையும் கைது செய்துள்ளனர்.