டெல்லியில் 60 வயது சீக்கியரின் தலைமுடியை வெட்டி ஆசிட் வீசிய கும்பல்
டெல்லி: டெல்லியில் 60 வயது சீக்கியரின் தலைமுடியை வலுக்கட்டாயமாக வெட்டி அவர் மீது ஆசிட் வீசிய கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
தென்கிழக்கு டெல்லியில் உள்ள போகல் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் சிங் தாப்பார்(60). ஆட்டோரிக்ஷா வைத்துள்ளார். அவர் திங்கட்கிழமை இரவு 7.30 மணி அளவில் போகல் பகுதியில் வந்து கொண்டிருக்கையில் 6 முதல் 7 பேர் வரை கொண்ட கும்பல் அவரை வழிமறித்து தாக்கியது. அவரின் தலைமுடியை வெட்டி, அவர் மீது ஆசிட் வீசிவிட்டு தப்பியோடியது.
ஆசிட் வீசப்பட்டதில் தாப்பாரின் மார்பகம், வயிறு மற்றும் மர்ம உறுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சோமன் நாயக் என்பவரை கைது செய்துள்ளனர். மீதமுள்ளவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து போகல் பகுதியில் உள்ள வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
இது குறித்து தாப்பாரின் மகள் பிரியா கூறுகையில்,
என் தந்தை வீட்டுக்கு வந்தபோது அவரை யாரோ அடித்து, தலைமுடியை வெட்டி, ஆசிட் வீசியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். என் தந்தைக்கு யாருடனும் விரோதம் இல்லை. அப்படி இருக்கையில் அவரை யார் தாக்கியது என்று தெரியவில்லை என்றார்.