கேஜ்ரிவால் ஒரு நம்பிக்கை துரோகி.. மோடி கடும் தாக்கு! முடிந்தால் கைது செய்யட்டும்.. கேஜ்ரிவால் சவால்!
டெல்லி: மக்கள் நம்பிக்கைக்கு ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் துரோகம் செய்து விட்டார் என்று பிரதமர் நரேந்திரமோடி மோடி கடுமையாக தாக்கி பேசினார்.
டெல்லி சட்டசபைக்கு வருகிற 7ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி வடக்கு டெல்லியில் உள்ள ரோகினி என்ற இடத்தில் பேசினார்.
அவர் கூறியதாவது:
கட்சிக்கு அளிக்கப்பட்ட நன்கொடை குறித்து அவர்கள் (ஆம் ஆத்மி) நாங்கள் யாரிடமும் எதையும் கேட்கவில்லை என்றார்கள். இப்போது யாரோ எங்களுடைய வங்கி கணக்கில் பணத்தை செலுத்தி விட்டனர் என்கிறார்கள். அப்படி செலுத்தியவர்கள் யார் என்பதும் எங்களுக்கு தெரியாது என்றும் சொல்கின்றனர்.
இவர்கள்(ஆம் ஆத்மி) எங்களைப் போல் நேர்மையானவர்கள் யாரும் இல்லை என்று சொல்லிக்கொண்டார்கள். ஆனால் அவர்களின் வங்கி கணக்கில் வெளிநாட்டு பணம் செலுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால் ஒரே நாள் இரவில் தவறான முறையில் பணம் போடப்பட்டது குறித்து முதல் முறையாக இப்போதுதான் நாம் கேள்விப்படுகிறோம். இதை விட மிகப்பெரிய அவமானம் வேறு எதுவும் இல்லை.
நாட்டு மக்கள் எப்போதும் தவறுகளை மன்னிப்பார்கள். ஆனால் நேர்மையற்ற செயலை மன்னிக்கவே மாட்டார்கள். அவர்கள் மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்து விட்டார்கள். இப்படி நேர்மை அற்றவர்களாலும், பொய் சொல்கிறவர்களாலும் டெல்லியில் ஆட்சி நடத்த இயலுமா? டெல்லியில் பாஜk ஆட்சி அமைத்தால் டெல்லி சர்வதேச அளவில் புகழ்பெற்ற நகரமாக மாற்றும்.
டெல்லியில் நிலையான ஆட்சி அமைந்தால் அது எனக்கு நேரத்தை மிச்சப்படுத்தும். இதன் மூலம் நாட்டின் மற்ற பகுதி மக்களுக்கு செலவிட எனக்கு நேரம் கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
இதனிடையே கேஜ்ரிவால் தேர்தல் பிரசார கூட்டத்தில் மோடிக்கு சவால் விடுத்தார். இது பற்றி அவர் பேசுகையில், ‘‘பாஜகவுக்கு டெல்லி தேர்தலில் தோற்றுப் போவோம் என்ற பயம் வந்து விட்டது. எங்களுக்கு நள்ளிரவில் ஹவாலா பணம் வங்கியில் செலுத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டில் நாங்கள் இம்மியளவு தவறாக நடந்து கொண்டிருந்தால் கூட என்னை மத்திய அரசு கைது செய்யட்டும். ஆனால் இதைச் செய்யும் தைரியம் அவர்களிடம் கிடையாது'' என்றார்.