உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களின் பட்டியலில் டெல்லிக்கு 2வது இடம்
டெல்லி: உலகிலேயே மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் டெல்லிக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது. உலக நகர்மயமாதல் நிலவரம் குறித்து ஐக்கிய நாடுகள் சபை நடத்திய ஆய்வில் இத்தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் வருங்காலங்களில் நகர்ப்புறங்களில் மக்கள் குடியேறுவது மிக அதிக அளவில் நடக்க உள்ளதாகவும் அந்த ஆய்வறிக்கை சுட்டிக்காண்பிக்கிறது.
டோக்கியோ முதலிடம்
2014ம் ஆண்டின் நிலைப்படி ஜப்பான் தலைநகர் டோக்கியோ உலகின் மக்கள் தொகை அதிகமுள்ள நகரமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. டோக்கியோவில் 3 கோடியே 80 லட்சம் பேர் வசிக்கிறார்கள். 2030ல் இந்த மக்கள் தொகை 3 கோடியே 70 லட்சமாக குறைய வாய்ப்புள்ளதாகவும், ஆயினும் அப்போதும் டோக்யோதான் நம்பர்- நகரமாக நீடிக்கும் என்றும் இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
டெல்லிக்கு 2ம் இடம்
இந்திய தலைநகர் டெல்லி இந்த பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. டெல்லியில் தற்போது 2 கோடியே 50 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். 1990ம் ஆண்டு கணக்கெடுப்பை ஒப்பிட்டால் இது இரு மடங்கு அதிகமாகும். 2030ல் டெல்லியில், 3 கோடியே 60 லட்சம் பேர் வசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போதும் மக்கள் தொகையில் உலகின் இரண்டாவது நகரம் என்ற நிலையை டெல்லி தக்க வைத்துக்கொள்ளபோகிறது.
மும்பைக்கு 6வது இடம்
இந்திய நகரங்களில் டெல்லிக்கு அடுத்ததாக மும்பை வருகிறது. உலக அளவில் இந்த நகரம் 6வது இடத்தில் உள்ளது. தற்போது இந்த நகரில் 2 கோடியே 10 லட்சம்பேர் வசிப்பதாகவும், 2030ல் இது 2 கோடியே 80 லட்சமாக அதிகரிக்கும் என்றும் ஆய்வறிக்கை சுட்டிக் காண்பிக்கிறது.
டாப் மக்கள் தொகை நகரங்கள்
உலக அளவில், டோக்கியோ, டெல்லியை தொடர்ந்து, 2 கோடியே 30 லட்சம் மக்களுடன் ஷாங்காய் மூன்றாவது இடத்தையும், மெக்சிகோ சிட்டி, மும்பை, சா பவுலோ ஆகியவை அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளன.
இதிலும் சீனாதான் போட்டி
2050க்குள் இந்தியா, சீனா, நைஜீரியாவில்தான் அதிகப்படியான மக்கள் நகரங்களை நோக்கி நகரப்போவதாகவும், உலக அளவில் இந்த மூன்று நாடுகளும் 37 சதவீத நகர்மயமாதல் பங்கை தங்கள் வசம் வைத்திருக்கபோவதாகும் அந்த ஆய்வறிக்கை அச்சுறுத்துகிறது.
இரு மடங்காகுமாமே..
இந்தியாவில் தற்போது சுமார் 85 கோடி மக்கள் கிராமங்களில் வசிக்கிறார்கள். இதற்கடுத்ததாக 63 கோடி பேர் சீனாவில் நகரங்களில் வசிக்கிறார்கள். 2050ல் இந்த நிலை மாறி இந்தியாவில் அதிகப்படியானோர் நகரங்களில் வசிக்க தொடங்குவார்கள் என்று அந்த ஆய்வு கணித்துள்ளது. எனவே கிராமங்களிலும் மக்களுக்கு அடிப்படை வசதிகளும், வேலைவாய்ப்பும் கிடைக்க செய்வது அரசின் கடமையாகிறது.