நேற்று ரூ.600 கோடிக்கு அதிபதி... இன்று ஜைன துறவி...
டெல்லி: துறவியாக தனி மனது வேண்டும். பணமில்லாதவர்கள் குடும்பத்தை காக்க முடியாமல் சாமியாராக செல்வது ஒருவகை என்றால் கோடீஸ்வரர் ஒருவர் தனது 600 கோடி ரூபாய் சொத்துக்களை துறந்து துறவியாக மாறியுள்ளார்.
டெல்லியில் `பிளாஸ்டிக் மன்னன்' என்று அறியப்படும் பன்வர்லால் ரகுநாத் தோஷி எனும் கோடீஸ்வரர்தான் தனது சொத்துகள் எல்லாவற்றையும் துறந்து ஜைன மதத் துறவியாகியுள்ளார்.
பிரபல பிளாஸ்டிக் வியாபாரியான பன்வர்லால் ரகுநாத் தோஷி. சுமார் ரூ.600 கோடிக்கு அதிபதியான இவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். தனது தந்தையிடம் ரூ.30 ஆயிரம் கடனாகப் பெற்று பிளாஸ்டிக் வர்த்தகத்தில் இறங்கினார் தோஷி. தொடக்கத்தில் போராட்டத்தை சந்தித்த போதிலும், அவரது வர்த்தக மதிப்பு உயர்ந்து ரூ.600 கோடியைத் தாண்டியது.
1982-ம் ஆண்டு முதன்முறையாக ஜைன மத பிரச்சாரங்களால் ஈர்க்கப்பட்டார். அன்று முதல் அவர் ஜைன மதத் துறவியாக விரும்பினார். இதற்கு இவரது குடும்பத்தாரிடம் பலத்த எதிர்ப்பு இருந்தது. எனினும், இவர் கடந்த ஆண்டு தனது குடும்பத்தை சமாதானப்படுத்தி துறவறத்துக்கு அனுமதி வாங்கினார். இதனை ஒரு விழாவாக கொண்டாடினர்.
ஜைன மத ஊர்வலம்
சனிக்கிழமையன்று `வர்சி தான்' எனும் ஜைன மத ஊர்வலம் நடைபெற்றது. சுமார் 7 கிலோமீட்டர் தூரம் வரை நீண்ட இந்த ஊர்வலத்தில் ஆயிரம் ஜைன துறவிகள், 12 தேர்கள், 9 யானைகள், 9 ஒட்டக வண்டிகள் மற்றும் பாரம்பரிய இசைக் கலைஞர்கள் பலர் கலந்துகொண்டனர்.
ஜைன துறவி
ஞாயிற்றுக்கிழமை இவர், ஜைன மதத் தலைவர் குணரத்ன சுரீஷ்வர்ஜி மகராஜின் கீழ் சீடராக தன்னை இணைத்துக்கொண்டார். இவர் மகராஜின் 108-வது சீடரும், அவரிடம் சந்நியாசம் வாங்கும் 354-வது துறவியும் ஆவார்.
ரூ.100 கோடி செலவு
இந்த விழாவுக்காக இவர் அகமதாபாத் கல்விமைதானத் தில் ரூ.100 கோடிக்கு மேடை அமைத்திருந்தார். கூடாரங்கள், ஒளி அலங்காரம், குடிநீர் வசதி போன்ற பணிகளைச் செய் வதற்காக மட்டும் 20 நிறுவனங்கள் அழைக்கப்பட்டிருந்தன. நிகழ்ச்சி யில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுப்பதற்காக 200 பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
ரூ.25 கோடி நன்கொடை
இந்த நிகழ்வில் ஜைன மத அமைப்புகளுக்கு ரூ.25 கோடி மதிப்புள்ள நன்கொடைகள் வழங்கப்பட்டன. சுமார் ஆயிரம் சாதுக்கள் தவிர, 1.5 லட்சம் மக்கள் இந்த நிகழ்ச்சியைக் காண வந்திருந்தனர். வந்திருந்த பார்வையாளர்களில் 101 பேர் அடுத்த ஐந்தாண்டு களில் ஜைன தீட்சை பெற்றுக் கொள்வதற்கு உறுதி எடுத்துக் கொண்டனர். இந்த விழாவில் அதானி குழுமங்களின் தலைவர் கவுதம் அதானி, பன்வர்லால் தோஷியை கவுரவித்தார்.
கனவு பலித்தது
ஜெயின் மதக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டிருந்த தோஷி கடந்த 1982-ம் ஆண்டிலிருந்தே துறவியாக விரும்பினார். ஆனாலும் இவரது கனவு இப்போதுதான் நிறை வேறி உள்ளது.