ஆம் ஆத்மி ரொம்ப 'ரிஸ்க்' பாஸ்.. பாஜக மீது 'பெட்' கட்டும் புக்கிகள்!
டெல்லி: புக்கிகளுக்கு இதோ இன்னும் ஒரு பெட்டிங் வாய்ப்பு.. டெல்லி சட்டசபைத் தேர்தல் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருப்பதால் அதை வைத்தும் பெட்டிங் சூடு பிடித்துள்ளதாம்.
அத்தனை பேர் கண்களும் புதிதாகப் பிறந்து காங்கிரஸுக்குப் பெரும் இம்சையைக் கொடுத்து வரும் ஆம் ஆத்மி மீதுதான் உள்ளது. ஆனால் புக்கிகளுக்கு ஆம் ஆத்மி மீது இன்னும் முழு நம்பிக்கை வரவில்லையாம்.
எனவே ஆம் ஆத்மி மீது பெட் வைப்பதை விட பாஜக மீதுதான் விதம் விதமான பெட் வைத்து வருகிறார்களாம்.
டிசம்பர் 4ம் தேதி தேர்தல்
டெல்லி சட்டசபைக்கு டிசம்பர் 4ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து பாஜகவும், ஆளுங்கட்சியான காங்கிரஸும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
கடுப்படிக்கும் ஆம் ஆத்மி
அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிதான் காங்கிரஸுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.
ஆனால் புக்கிகளுக்கு கவலை இல்லையாம்
காங்கிரஸ் வேண்டுமானால் ஆம் ஆத்மி குறித்து கவலைப்படலாம்.. ஆனால் புக்கிகளுக்கு ஆம் ஆத்மி ஒரு பொருட்டாகவே தெரியவில்லையாம்.
களம் குதித்த புக்கிகள்
சட்டசபைத் தேர்தலை வைத்து பெட்டிங்கில் குதித்துள்ளனர் புக்கிகள். அவர்கள் அதிகம் நம்பி பெட் வைத்து வரும் கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளதாம். ஆம் ஆத்மியை அவர்கள் கண்டு கொள்ளவில்லையாம்.
ஜெயிக்க வாய்ப்பே இல்லை
ஆம் ஆத்மி டெல்லி தேர்தலில் ஜெயிக்க வாய்ப்பே இல்லை என்று நிறையப் பேர் பெட் கட்டியுள்ளனராம். இதற்கு கடைசி இடத்தைத்தான் புக்கிகள் கொடுத்துள்ளனர்.
முதலிடத்தில் பாஜக
அதேசமயம், பாஜக வெல்லும் என்று அதிகம் பேர் பெட் கட்டியுள்ளனராம். 2வது இடத்தில் காங்கிரஸை வைத்துள்ளனர்.
ஒரு லட்சத்துக்குப் பெட் வைத்தால் ரூ. 2.25 லட்சம் கிடைக்கும்
இந்த பெட்டிங் விவகாரம் குறித்து ஒரு புக்கி விவரமாக கூறுகையில், பாஜக மீது ரூ. 1 லட்சத்துக்கு நீங்கள் பெட் கட்டினால், பாஜக வென்றால் உங்களுக்கு ரூ. 2.25 லட்சம் கிடைக்கும். அதேபோல காங்கிரஸ் வென்றால் ரூ. 2.4 லட்சம் கிடைக்கும். ஒரு வேளை ஆம் ஆத்மி ஜெயித்து விட்டால் ரூ. 3.4 லட்சம் கிடைக்கும்.
பல கட்சிகள் மீது பெட்
சிலர் மூன்று கட்சிகள் மீதும் பெட் கட்டுகின்றனர். காரணம், ஏதாவது ஒன்று காலை வாரி விட்டாலும் மற்றது கை கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பால்.
நவம்பரிலிருந்து பெட்டிங் ஸ்டார்ட்டிங்
நவம்பர் முதல் வாரத்திலிருந்து பெட்டிங் தொடங்கியுள்ளதாம். தேர்தல் நெருங்க நெருங்க பெட்டிங் தொகை ஏறி இறங்குமாம். கடைசி நேரத்தில் ஏதாவது திடீர் திருப்பம் ஏற்பட்டால் அதற்கேற்ப ரேட் கூடுமாம்.
பல கோடிக்கு பெட்
இந்த மூன்று கட்சிகள் மீதும் இதுவரை பல ஆயிரம் கோடி அளவுக்கு பெட் வைக்கப்பட்டுள்ளதாம்.
பன்டர்னா என்ன.. புக்கின்னா என்ன...
இது புக்கிகளின் உலகில் புழங்கும் வார்த்தைகள். அதாவது பெட் வைப்பவருக்குப் பெயர் பன்டர். அவர் கொடுக்கும் பணத்தை வாங்குபவருக்குப் பெயர்தான் புக்கி. பெட்டிங் இந்தியாவில் சட்டவிரோதமாகும். ஒரு புக்கி அல்லது பன்டரைக் கைது செய்தால் அவர்கள் மீது 420 வழக்கு திவாகிறது. இது ஜாமீனில் வெளி வர முடியாத பிரிவு. அதிகபட்சம் 7 அல்லது அதற்கு மேலான ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும்.
தொகுதிகள் மீதும் பெட்
மொத்தமாக யார் ஜெயிப்பார் என்ற பெட் போக, எந்தத் தொகுதியில் யார் ஜெயிப்பார்கள் என்றும் பெட் வைக்கிறார்களாம்.
புதுடெல்லிக்கு செம கிராக்கி
புது டெல்லி தொகுதிதான் இதில் அதிக கிராக்கியுடன் உள்ளது. இங்குதான் முதல்வர் ஷீலா தீட்சித், கேஜ்ரிவால் ஆகியோர் போட்டியிடுகின்றனர். பாஜக தலைவர் விஜேந்திர குப்தாவும் இங்குதான் மல்லுக்கட்டுகிறார்.
பெண் புக்கிகளும் ஏராளம்
புக்கிகளில் பெண்களும் பலர் இருக்கிறார்களாம். கிட்டத்தட்ட 30 புக்கிகளின் பெயர்களை ஷார்ட்லிஸ்ட் செய்துள்ள போலீஸார் அவர்களைத் தீவிரமாக கண்காணித்து வருகின்றனராம். குறிப்பாக அம்பேத்கர் நகர், நெப் சராய், மெஹ்ராலி, நபி கரிம், சாந்தினி செளக், சீலாம்பூர், கீதா காலனி ஆகிய பகுதிகளில்தான் புக்கிகள் நடமாட்டம் அதிகம் இருப்பதாக கூறப்படுவதால் அங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.