கடத்தப் போவதாக மர்ம நபர்கள் மிரட்டல்- மும்பை சென்ற ஜெட் ஏர்வேஸ் அகமதாபாத்தில் அவசரமாக தரை இறக்கம்
டெல்லியில் இருந்து மும்பை சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானத்தை கடத்தப் போவதாக மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அகமதாபாத்: டெல்லியில் இருந்து மும்பை சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானத்தை கடத்தப் போவதாக மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து குஜராத்தின் அகமதாபாத்துக்கு அந்த விமானம் திருப்பிவிடப்பட்டு பாதுகாப்பாக தரை இறக்கப்பட்டது.
டெல்லியில் இருந்து இன்று அதிகாலை 2.55 மணிக்கு மும்பைக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் புறப்பட்டு சென்றது. அந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விமானத்தின் கழிவறையில் ஊழியர்கள் ஒரு கடிதத்தைக் கண்டெடுத்தனர்.
அக்கடிதத்தில் இந்த விமானத்தில் கடத்தல்காரர்களும் வெடிபொருட்களும் இருக்கிறது என எழுதப்பட்டிருந்தது. இது தொடர்பாக விமான கட்டுப்பாட்டு நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து அதிகாலை 3.45 மணியளவில் குஜராத்தின் அகமதாபாத்தில் விமானம் பாதுகாப்பாக தரை இறக்கப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக விமானம் தரை இறக்கப்படுவதாக பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.