கடைசி நேரத்தில் உயிர்தப்ப முயன்ற மூவர்.. கை கட்டு அவிழ்ந்த மர்மம்.. புராரி மரணத்தில் புது தகவல்
டெல்லி புராரி வழக்கில் கடைசி நேரத்தில் உயிர் தப்ப 3 பேர் முயன்றதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி: டெல்லி புராரி வழக்கில் கடைசி நேரத்தில் உயிர் தப்ப 3 பேர் முயன்றதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெல்லியில் புராரி பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தனர். தகவலறிந்த போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
வீட்டில் பணம், நகை என எப்பொருளும் கொள்ளையடிக்கப்படவில்லை என விசாரணையில் தெரியவந்தது. மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையில் 11 பேரும் எந்தவித போராட்டமுமின்றி உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.
ஆலமரம் விழுது
எனவே இது தற்கொலைதான் என்று போலீஸார் முடிவுக்கு வந்தனர். இந்நிலையில் வீட்டிலிருந்து அமானுஷ்ய கடிதம் ஒன்று கிடைக்கப் பெற்றது. உயிரிழந்த நாராயணியின் மகன் லலித் பாட்டியா 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த தந்தையை போல் நடந்து கொள்வதாகவும் கடவுளை ரட்சிக்க 11 பேரும் தூக்கில் ஆலமரம் விழுதுகளை போல் தொங்க வேண்டும் என்றும் லலித் மற்றவர்களை மூளைச் சலவை செய்திருந்ததாக தெரிய வந்தது.
சிற்றுண்டிக்கு தயார்
தூக்கிலிட்டும் கொள்ளும் எண்ணம் இருந்த இவர்கள் மறுநாள் சிற்றுண்டிக்காக கடலை பருப்பை நீரில் ஊறவைத்திருந்தனர். பாலை தயிராக்கும் முறையையும் செய்திருந்தனர். மேலும் அக்குடும்பத்தை சேர்ந்த பிரியங்கா என்பவருக்கு திருமணம் நடைபெறவிருந்தது. இந்த சூழலில் அவர்கள் தற்கொலை செய்ய வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்வி எழுந்தது.
2015முதல் எழுதுதல்
கடவுளை ரட்சிக்க தூக்கிட்டு கொண்டால் கடவுளும் இறந்த தந்தையும் தங்களை காப்பாற்றுவர் என்ற மூடநம்பிக்கையை அந்த குடும்பத்தினர் கொண்டிருந்தனர். மேலும் கடவுளை ரட்சிப்பது எப்படி என்பது தொடர்பாக 2015-ஆம் ஆண்டு முதல் அக்குடும்பத்தினர் டைரியில் குறிப்புகளை எழுதி வந்தனர்.
பிளான்
ஏராளமான மர்மங்கள் நிறைந்துள்ள இந்த மரணத்தில் 3 பேர் தப்பிக்க முயன்றனர் என்ற தகவல் தெரியவந்துள்ளது. 11 பேரில் குறிப்பிட்ட 3 பேரின் கைகட்டுகள் அவிழ்ந்து இருந்தது தெரியவந்துள்ளது. எனவே இவர்கள் மூவரும் இந்த தூக்கில் இருந்து தப்பிக்க நினைத்திருக்கலாம் என்று தெரியவந்தது.