தலைமை செயலகத்தில் காணாமல் போன டெல்லி முதல்வரின் கார் உ.பி.யில் மீட்பு!
டெல்லி தலைமை செயலகத்தில் இருந்து திருடப்பட்ட முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் கார் உத்தரப்பிரதேசத்தில் மீட்கப்பட்டது.
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் காரை மர்மநபர்கள் திருடி சென்றுவிட்டனர். இந்த கார் உ.பி.மாநிலம் காசியாபாத்தில் மீட்கப்பட்டது.
டெல்லி முதல்வராக இருப்பவர் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால். இவருக்கு பரிசாக வந்த நீல நிற மாருதி வேகன் ஆர் காரை பயன்படுத்தி வந்தார்.
இந்நிலையில் கடந்த 12-ஆம் தேதி தலைமை செயலகத்துக்கு வந்த முதல்வர் தனது காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். பின்னர் பணிகளை முடித்துக் கொண்டு அவர் வீடு செல்ல காரை எடுக்கச் சென்ற போது அவரது காரை அங்கு காணவில்லை.
அக்கம்பக்கங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து முதல்வரின் காரை திருடியவர்கள் குறித்து போலீஸார் தேடி வருகின்றனர். பாதுகாப்பு நிறைந்த தலைமை செயலகத்தில் மர்ம நபர்கள் காரை திருடிச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் டெல்லியில் காணாமல் போன கார், உத்தரப்பிரதேசத்தில் உள்ள காசியாபாதில் கண்டெடுக்கப்பட்டது.