டெல்லியிலிருந்து வெளிநாடுகளுக்கு கடத்த முயற்சி.. 39 நேபாள பெண்கள் மீட்பு
டெல்லியிலிருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட இருந்த 39 நேபாள பெண்கள் டெல்லி பெண்கள் ஆணையத்தால் மீட்கப்பட்டுள்ளனர்.
டெல்லி: டெல்லியில் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதற்காக ஒரு ஹோட்டல் அறையில் தங்கவைக்கப்பட்டிருந்த நேபாள நாட்டைச் சேர்ந்த 39 பெண்களை டெல்லி பெண்கள் ஆணையம் அதிரடியாக மீட்டுள்ளது.
டெல்லி பெண்கள் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மலிவால் போலீஸார் துணையுடன் டெல்லியில் அதிரடியாக ஆய்வுகளை மேற்கொண்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்பட இருந்த பெண்கள் பலரை மீட்டு வருகிறார்.
இந்நிலையில், டெல்லி பெண்கள் ஆணையத் தலைவர் ஸ்வாதி மலிவாலுக்கு நேற்று இரவு 1 மணிக்கு, ஒரு தொண்டு நிறுவனத்திடமிருந்து, வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதற்காக ஒரு ஹோட்டலில் நேபாள நாட்டு பெண்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக விரைந்து செயல்பட்ட ஸ்வாதி மலிவால் டெல்லி காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர், ஸ்வாதி மலிவால் டெல்லி போலீஸார் துணையுடன் டெல்லி பஹர்கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் ஆய்வு நடத்தினார். அங்கே வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாகக் கூறி ஒரு கும்பல், நேபாள நாட்டைச் சேர்ந்த 39 பெண்களை வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக ஒரு அறையில் அடைத்துவைத்திருப்பதை கண்டறிந்தார். அந்த நேபாள நாட்டு பெண்களை மீட்ட ஸ்வாதி மலிவால் அவர்களை காப்பகத்தில் சேர்த்தார்.
இது குறித்து டெல்லி பெண்கள் ஆணையத் தலைவி ஸ்வாதி மலிவால் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பாலியல் பலாத்கார நகரம் என்று அறியப்பட்டிருக்கிற டெல்லி தற்போது மனித கடத்தல்களின் தலைநகரமாக மாறிக்கொண்டிருக்கிறது. இந்த ஒரு வாரத்தில் மட்டும் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட இருந்த 73 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். இது டெல்லியில் மிகப்பெரிய மனித கடத்தல் கும்பல் செயல்படுகிறது என்பதையே காட்டுகிறது. ஆனால், போலீஸாருக்கு இதைப்பற்றி எதுவுமே தெரியவில்லை. பெண்கள் ஆணையமும், பெண்களும் ஆபத்தில் இருக்கிறார்கள். ஆனால், போலீஸார் நடவடிக்கை எடுப்பதில் தோல்வியடைந்துள்ளனர்.
இந்த பகுதிகளில் பணிபுரியும் போலீஸாருக்கு தெரியாமல் இது போன்ற சட்டவிரோதமான செயல்கள் நடந்துகொண்டிருக்கிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. எங்களுக்கு தெரியாது என்று போலீஸார் கூறுவது பல கேள்விகளை எழுப்புகின்றன. பெண்களைக் கடத்துவதற்கு ஒத்துழைக்க போலீஸாருக்கு பணம் கொடுக்கப்படுகிறது என்று ஸ்வாதி மலிவால் குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து, இந்த அதிரடி ஆய்வு குறித்து ஸ்வாதி மலிவால் கூறுகையில், இரவு முழுக்க இந்த ஆய்வு நடைபெற்றது. போலீஸார் அதற்கான உதவியைச் செய்தார்கள். கடத்தப்பட்ட பெண்கள் பலர் வளைகுடா நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளார்கள். இலங்கைக்கும் சில பெண்கள் ஏற்கெனவே கடத்தப்பட்டிருக்கிறார்கள்.
நேபாளத்தில் நிலநடுக்கம் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்துதான் பெண்கள் வளைகுடா நாடுகளுக்கும் இலங்கைக்கும் கடத்தப்படுகிறார்கள். நேபாள பெண்களும் சிறுமிகளும்தான் சர்வதேச மனித கடத்தல் கும்பல்களிடம் எளிதில் சிக்கிக்கொள்கிறார்கள்" என்று ஸ்வாதி மலிவால் தெரிவித்தார்.
மேலும், ஸ்வாதி மலிவால் கூறுகையில், டெல்லியின் பஹர்கஞ்ச் ஹோட்டல்கள் மனித கடத்தல்களின் கேந்திரமாக மாறியுள்ளது. அதனால், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உடனடியாக இந்த பிரச்சனை தொடர்பாக டெல்லி கவர்னர், டெல்லி போலீஸ் கமிஷனர் கூட்டத்தை நடத்த வேண்டும். இதில் டெல்லி போலீஸாருக்கு உள்ள பொறுப்பை உறுதி செய்யவேண்டும் என்று வலியுறுத்தினார்.