காங் தலைவராக பொறுப்பேற்றார் ராகுல்காந்தி... கட்சி அலுவலகத்தில் விழாக்கோலம்!
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி இன்று பொறுப்பேற்றுக் கொள்வதையடுத்து டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது.
டெல்லி : அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்றுக் கொண்டார். ராகுல்காந்தி பொறுப்பேற்றதை தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக அதிகாரப்பூர்வமாக ராகுல் காந்தி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். ராகுலை தலைவராக தேர்ந்தெடுக்க காங்கிரஸ் காரிய கமிட்டி ஒப்புதல் அளித்த நிலையில் அவர் கட்சி தேர்தலில் முறைப்படி தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கான விண்ணப்பத்தை அளித்தார்.
ராகுல்காந்தியை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாத நிலையில் அவர் அந்த பொறுப்புக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து அவர் இன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொள்கிறார். 4 ஆண்டுகளுக்கு முன்னர் ஜனவரி 2013ல் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றார்.
ராகுல் தலைமையில் காங்.
காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்திக்கு உடல்நிலை சரியில்லாததையடுத்து அடுத்த தலைவருக்கான பேச்சு எழுந்த நிலையில், ராகுல் காந்தி தனது தாயின் இடத்தை கட்சியில் இன்று நிரப்புகிறார். குஜராத் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக ராகுல்காந்தி பிரச்சாரம் செய்தார். இதற்கான தேர்தல் முடிவுகள் திங்கட்கிழமை வெளியாக உள்ள நிலையில் ராகுல்காந்தி இன்று தலைவராக பொறுப்பேற்றார்.
ராகுல் எடுத்த முதல் நடவடிக்கை
காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்பவதாக அறிவிக்கப்பட்ட பிறகு அவர் எடுத்த முதல் நடவடிக்கையே காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர் மீது தான். பிரதமர் நரேந்திர மோடியை இழிவான வார்த்தைகளால் மணிசங்கர் ஐயர் விமர்சித்ததையடுத்து அவர் மீது ராகுல்காந்தி ஒழுங்கு நடவடிக்கை எடுத்தார். தொடக்கத்திலேயே கட்சியை தான் கட்டுக்கோப்பாக கொண்டு செல்வேன் என்று ராகுல் கண்டிப்புடன் இருப்பதற்கான பிரதிபலிப்பாகவே இந்த நடவடிக்கையானது பார்க்கப்பட்டது. இதனிடையே இன்று 132 ஆண்டு பாரம்பரியமிக்க காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றுள்ளார்.
|
கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள்
ராகுல்காந்தி பொறுப்பேற்றுக் கொள்வதையடுத்து காலை 6 மணி முதலே டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் முன்பு தொண்டர்கள் திரண்டனர். இந்தியாவின் சக்தியே என்று பேனர் வைத்து இளம் தொண்டர்கள் ராகுல்காந்தியை வரவேற்றனர்
|
கொண்டாட்டத்தில் தொண்டர்கள்
பட்டாசுகளுடன் காங்கிரஸ் கட்சி அலுவலக வாசலில் காத்திருந்த தொண்டர்கள்,ராகுல்காந்தி அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்ற பின்னர் பட்டாசுகளை வெடித்தும் ஒருவருக்கு ஒருவர் இனிப்புகளை பரிமாறியும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். ராகுல் பொறுப்பேற்பு நிகழ்ச்சி மேடையில் சோனியாகாந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள் இடம்பெற்றிருந்தனர்.