டெல்லி தேர்தலில் படுதோல்வி: அஜய் மக்கான், அர்விந்தர் சிங் லவ்லி ராஜினாமா
டெல்லி: சட்டசபைத் தேர்தலில் வரலாறு காணாத தோல்வியடைந்துள்ளது. இந்த தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதேபோல முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட அஜய் மக்கான் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை ராஜினமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 7ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிலவினாலும், தேர்தல் களத்தில் பாஜக - ஆம் ஆத்மி இடையேதான் கடுமையான போட்டி நிலவியது.
தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ் கட்சிக்கு மூன்று முதல் இடங்கள் மட்டுமே கிடைக்கும் என உறுதியாக அடித்துச் சொல்லப்பட்டது.
அந்த கணிப்புகளை பொய்யாக்கியுள்ளனர் டெல்லி மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கொடுக்காமல் பட்டை நாமம் சாத்திவிட்டனர். இதனால் ஒட்டு மொத்த தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் மாநிலத்தலைவர் அர்விந்த் சிங் லவ்லி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கட்சித்தலைவி சோனியா காந்தியிடம் தனது பதவியைக் கொடுத்தார்.
சட்டசபை தேர்தலின் பிரச்சாரக்குழுத் தலைவராக இருந்த அஜய் மக்கான், தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று தனது காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் தோல்வி உறுதி என்று தெரியும் ஆனால் இப்படி ஒரு சீட் கூட கிடைக்காமல் தோற்போம் என்று எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளனர் காங்கிரஸ் கட்சியினர்.