மெஹர் தாரருடன் உள்ள தொடர்பு என்ன? சசி தரூரிடம் கேட்ட டெல்லி போலீஸ்
டெல்லி: சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சரும் அவரது கணவருமான சசி தரூரிடம் டெல்லி வசந்தவிகாரில் உள்ள சிறப்பு புலனாய்வுக் குழு அலுவலகத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
டெல்லியில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் கடந்த ஆண்டு ஜனவரி 17ஆம் தேதியன்று சுனந்தா மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
சுனந்தா விஷம் கொடுத்து கொள்ளப்பட்டு இருக்கலாம் என டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்த மூன்று வாரங்களுக்கு பின் சசிதரூரிடம் விசாரணை நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உதவியாளரிடம் விசாரணை
சுனந்தாவின் உடல் உறுப்புகளை வெளிநாட்டிற்கு பரிசோதனை செய்ய அனுப்பி வைக்க முடிவு செய்த போலீசார், இந்த கொலை தொடர்பாக, சசிதரூரின் உதவியாளர் மற்றும் வீட்டு பணிப்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர்.
சசி தரூருக்கு சம்மன்
இந்த விசாரணையில் ஆஜராகுமாறு சசிதரூருக்கு எஸ்ஐடி சம்மன் அனுப்பியிருந்தது. இதனையடுத்து தனது வழக்கறிஞர்களுடன் தீவிர ஆலோசனை செய்த பின்னர் சசிதரூர் இரவு 8 மணியளவில் போலீசார் முன்பு ஆஜரானார்.
கிடுக்கிப் பிடி கேள்விகள்:
சுனந்தா இறந்த 2014ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி அன்று நடந்தது என்ன?
திருவனந்தபுரத்திலிருந்து டெல்லி வந்த பின், ஏன் சுனந்தா தனியாக லீலா ஓட்டலுக்கு சென்றார்
பாகிஸ்தான் பத்திரிகையாளர் மெஹர் தாரருடன் உள்ள தொடர்பு என்ன?
காயம் வந்தது எப்படி?
சுனந்தாவின் உடல்நிலை, அவர் எவ்வித நோயால் அவதிப்பட்டு கொண்டிருந்தார்?
சுனந்தா உடலில் காயங்கள் வந்தது எப்படி என்பது போன்ற கேள்விகள் சசிதரூரிடம் கேட்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
செய்தியாளர்களிடம் விசாரணை
இதனிடையே, இறப்பதற்கு முன்பு சுனந்தாவுடன் பேசிய சில பத்திரிகையாளர்களிடமும் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் சுனந்தா கொலைவழக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.