வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜர்: மே 29 வரை டிடிவி தினகரனுக்கு திஹார் சிறைவாசம் நீட்டிப்பு!
அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் சிறை காவலை மே 29 வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி: இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் தரமுயற்சித்த புகாரில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர் மற்றும் டிடிவி தினகரனின் நீதிமன்றக் காவலை மேலும் 14 நாட்களுக்கு டெல்லி நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக புரோக்கர் சுகேஷ் சந்தருக்கு பணம் கொடுத்தாகவும், புரோக்கர் தந்த தகவலின் அடிப்படையில் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் கைது செய்து டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இன்றுடன் டிடிவி தினகரன், இடைத்தரகர் சுகேஷின் நீதிமன்றக் காவல் முடிவுபெறும் நிலையில் வீடியோ கான்பரன்சிங் மூலம் டிடிவி தினகரன் டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது இருவரின் நீதிமன்றக் காவலை மேலும் 14 நாட்களுக்கு அதாவது மே 29 வரை நீட்டித்து நீதிபதி உத்தவிட்டதையடுத்து அவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் இரட்டை இலை சின்ன பேரம் தொடர்பாக தொலைபேசி உரையாடலில் உள்ள தொலைபேசி உரையாடலின் உண்மைத்தன்மையை கண்டறிவதற்காக டிடிவி தினகரன், சுகேஷ் இருவரின் குரல் மாதிரிகளை பதிவு செய்வது தொடர்பாக அனுமதி கோரிய வழக்கின் விசாரணை மே 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே குரல் மாதிரி பதிவுக்கு இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.