தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம்: டிடிவி தினகரனுக்கு குரல் சோதனை நடத்த அனுமதி கோரிய டெல்லி போலீஸ்
தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரனின் குரலை சோதனை செய்ய அனுமதி கோரி டெல்லி போலீஸ் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
டெல்லி: அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்ச பேரம் பேசிய வழக்கில் சிறையில் உள்ள டிடிவி தினகரனின் குரலை சோதனை செய்ய அனுமதி கோரி டெல்லி போலீசார் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
அதிமுக இரு அணிகளாக பிளவுபட்ட நிலையில் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டைஇலை சின்னத்தை பெற புரோக்கர் சுகேஷ் சந்தர் மூலம் தேர்தல் ஆணையத்திற்கு லஞ்ச பேரம் பேசப்பட்டதாக புரோக்கர் சுகேஷ் சந்தர் டெல்லி தெற்கு பகுதியில் கைது செய்யப்பட்டார். சுமார் 50 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்ட நிலையில் சுகேஷிற்கு முன்பணமாக ரூ.1.30 கோடி அளிக்கப்பட்டதாக கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டது.
இந்த வழக்கில் குற்றவாளி சுகேஷ் சந்திரசேகரைத் தொடர்ந்து அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடந்த மாதம் கைது செய்து திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தினகரன் - சுகேஷ் இருவரின் உரையாடல் செல்போன் பதிவை ஆதாரமாக சேர்த்திருப்பதால் இருவரின் குரலை மோதிரி எடுத்துசோதனை செய்ய வேண்டும் என்று டெல்லி போலீசார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது டிடிவி தினகரன், சுகேஷ் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். முன்கூட்டியே கருத்து கேட்காமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதால், குரல் மாதிரி சோதனைக்கு அனுமதிக்கக்கூடாது என்று டிடிவி தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.
இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி பூனம் சவுத்ரி வழக்கு விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தார். இரட்டை இலை லஞ்சப் புகாரில் சுகேஷின் நீதிமன்றக் காவல் நாளையுடனும், டிடிவி தினகரனின் நீதிமன்றக் காவல் திங்கட்கிழமையோடும் முடியும் நிலையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.