அமெரிக்காவில் சிறுமி பலாத்காரம்- தேடப்படும் தமிழக பாதிரியாரை நாடு கடத்த டெல்லி கோர்ட் உத்தரவு!
டெல்லி: அமெரிக்காவில் 14 வயது பலாத்காரம் செய்த வழக்கில் தேடப்படும் தமிழக பாதிரியாரை விசாரணைக்காக அமெரிக்காவுக்கு நாடு கடத்தும்படி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
அமெரிக்காவின் மின்னசோட்டா நகரில் உள்ள 3 கிறிஸ்தவ தேவாலயங்களில் பாதிரியாராக பணியாற்றியவர் ஜோசப் பழனிவேல் ஜெயபால். தமிழகத்தைச் சேர்ந்த இவர் 2004-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை மின்னசோட்டாவில் தங்கியிருந்தார்.
அப்போது அங்குள்ள ஒரு தேவாலயத்துக்கு வந்த 14 வயது சிறுமி ஒருவரை அவர் பலாத்காரம் செய்ததாகவும் 2005-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை அவரை தொடர்ந்து மானபங்கம் செய்து வந்ததாகவும் ஜெயபால் மீது புகார் கூறப்பட்டது.
மேலும் இந்த உண்மைகளை வெளியே சொன்னால் உன்னை சும்மா விடமாட்டேன் என்றும், அந்த சிறுமியை அவர் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த புகார் மீது விசாரணை நடந்து கொண்டிருந்த நேரத்தில் குற்றம் சுமத்தப்பட்ட பாதிரியார் ஜெயபால் 2005-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்கு திரும்பிவிட்டார்.
வாரண்ட் பிறப்பிப்பு
இதனிடையே இந்த வழக்கை விசாரித்து வந்த ரெசிவ் கவுன்டி நீதிமன்றம் பாதிரியார் ஜெயபாலை கைது செய்யும்படி 2010-ம் ஆண்டு டிசம்பர் 28-ந் தேதி வாரண்டு பிறப்பித்தது. ஆனாலும் ஜெயபால் தன் மீது சிறுமி கூறிய குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து வந்தார்.
நாடு கடத்த கோரிக்கை
இந்த நிலையில் மத்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு பாதிரியார் ஜெயவேலை வழக்கு விசாரணைக்காக அமெரிக்காவுக்கு நாடு கடத்துமாறு கடந்த 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்க அரசு கோரிக்கை விடுத்தது.
டெல்லி நீதிமன்றத்தில் மனு
இதையடுத்து மத்திய வெளியுறவு அமைச்சகம் அரசு சிறப்பு வழக்கறிஞர் நவீன்குமார் என்பவரை நியமித்து டெல்லியில் உள்ள கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் இப்பிரச்சினை குறித்து முறையிடுமாறு கேட்டுக்கொண்டது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான பதிவேடுகள் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் மூலம் பெறப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
நாடு கடத்த உத்தரவு
இந்த வழக்கில் பாதிரியார் ஜெயவேல் மீதான புகாரில் அவர் குற்றம் புரிந்ததற்கான முகாந்திரம் இருப்பதாக நீதிமன்றம் கருதுவதால் அவரை எந்த நாடு கோரியதோ, அந்த நாட்டுக்கு நாடு கடத்தும்படி மத்திய அரசுக்கு நீதிமன்றம் பரிந்துரை செய்தது.
30 ஆண்டு சிறை
பாதிரியார் ஜெயபால் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மின்னசோட்டா மாகாண சட்டத்தின்படி 30 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.