இரட்டை இலைக்கு லஞ்சம்.. சுகேஷுக்கு ஜாமீன் கிடையாது… டெல்லி கோர்ட் அதிரடி
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்கப்பட்ட விவாகாரத்தில் கைதாகியுள்ள சுகேஷின் ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.
டெல்லி: இரட்டை இலைச் சின்னம் பெற்றுத் தர லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் இடைத் தரகராக குற்றம்சாட்டப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகரின் ஜாமீன் மனுவை இன்று டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தருவதற்காக 60 கோடி ரூபாய் பேரம் பேசி, முன்பணமாக 1 கோடியே 30 லட்சம் ரூபாய் தினகரனால் தரப்பட்டதாகக் கூறி சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார்.
டெல்லியில் கடந்த மாதம் 16ம் தேதி இரவு புதிய ரூபாய் நோட்டுகளுடன் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் டிடிவி தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் வழக்கு பதிவு செய்தது.
சென்னையில் விசாரணை
இதனைத் தொடர்ந்து, சுகேஷ் சென்னை அழைத்து வரப்பட்டு விசாரிக்கப்பட்டார். அவரிடம் பல்வேறு வகையிலும், பல்வேறு இடத்திலும் டெல்லி போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் பல முக்கிய தகவல்களை வெளியானது.
சிறையில் அடைப்பு
விசாரணைக்கு பின்னர் சுகேஷ் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருக்கும் அவர் தனக்கு ஜாமீன் தேவை என டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
விசாரணை
இந்த மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இரட்டை இலை சின்னம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் முக்கிய குற்றவாளி என்பதால் ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
முக்கிய ஆடியோ
மேலும், டிடிவி தினகரன், சுகேஷ் ஆகிய இருவர் பேசிய ஆடியோ மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதால் ஜாமீன் வழங்க முடியாது என்று நீதிமன்றம் திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது. இதனால் தனக்கு ஜாமீன் கிடைத்துவிடும் என்று எண்ணி இருந்த சுகேஷ் ஏமாற்றம் அடைந்துள்ளார்.