இரட்டை இலை பெற லஞ்சம் தர முயன்ற வழக்கு.. நாளை ஆஜராக தினகரனுக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன்
இரட்டை இலை பெற லஞ்சம் தர முயன்ற வழக்கில் நாளை ஆஜராகுமாறு டிடிவி தினகரனுக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
டெல்லி: இரட்டை இலை பெற லஞ்சம் தர முயன்ற வழக்கில் நாளை ஆஜராகுமாறு டிடிவி தினகரனுக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை சசிகலா அணிக்கு ஒதுக்க வேண்டும் என்பதற்காக டிடிவி தினகரன் தரப்பில் 50 கோடி பணம் பேரம் பேசப்பட்டதாகவும், இடைத்தரகர் மூலம் முன் பணம் கைமாற உள்ளதாகவும் டெல்லி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி டெல்லி குற்றப்பிரிவு போலீசார் டெல்லியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டல் அறையில் தங்கி இருந்த பெங்களூருவை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகரை அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் இருந்து 1.30 கோடி பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவம் அரசியல் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் சுகேஷ் சந்திரசேகரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இரட்டை இலை சின்னத்தை சசிகலா அணிக்கு ஒதுக்க வேண்டும் என்பதற்காக 50 கோடி பேரம் பேசப்பட்டதாகவும், அதில் முன்பணமாக 1.30 கோடியை டிடிவி தினகரன் தரப்பில் கொடுத்ததாகவும் சுகேஷ் சந்திரசேகர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
இந்த வழக்கு தொடர்பாக தினகரன் அவரது நண்பர்கள் உள்ளிட்ட பலர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நாளை ஆஜராகுமாறு டிடிவி தினகரனுக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.