டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்... தலையில் காயம்பட்டவருக்கு காலில் ஆப்ரேஷன் செய்த அரசு டாக்டர்
டெல்லியில் தலையில் காயமடைந்தவருக்கு, அரசு மருத்துவர் ஒருவர் தவறுதலாக காலில் அறுவை சிகிச்சை செய்த அதிர்ச்சி சம்பவம்.
Recommended Video
டெல்லி: டெல்லியில் தலையில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சைப் பெற வந்த நோயாளிக்கு, மூத்த மருத்துவர் ஒருவர் காலில் அறுவை சிகிச்சை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் சில தினங்களுக்கு முன் விபத்தில் சிக்கி தலையில் காயம் அடைந்த விஜயேந்திரா என்ற நபர், 'சுருஷ்ட்ரா டிராமா சென்டர்' எனும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த வியாழக்கிழமை ஆப்ரேஷன் தியேட்டரில் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு படுக்க வைக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக உள்ள வந்த மூத்த மருத்துவர் ஒருவர், விஜயேந்திராவை வேறு ஒரு நோயாளியான வீரேந்திரா என தவறுதலாக நினைத்து காலில் துளைப்போட்டு அறுவை சிகிச்சை செய்துள்ளார். நோயாளிக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டிருந்ததால், அவரால் எதுவும் செய்ய இயலவில்லை.
பின்னர் மயக்கம் தெளிந்து கண் விழித்த விஜயேந்திரா தனது காலில் அறுவை சிகிச்சை நடந்திருப்பவை அறிந்து குழப்பமும், அதிர்ச்சியும் அடைந்தார். இதுபற்றி அவரது உறவினர்கள் விசாரித்தபோது, தலையில் அறுவை சிகிச்சை செய்வதற்கு பதிலாக காலில் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகிகள் விரிவாக விசாரணை நடத்தினர். அதில், அந்த மூத்த மருத்துவர் தவறு செய்தது உறுதி செய்யப்பட்டது. மேலும், தனது தவறை வெளியில் தெரியாமல் மறைக்க, விஜயேந்திராவின் மருத்துவ ஆவணங்களை அழிக்க அவர் முயன்றதும் தெரியவந்துள்ளது.
தவறு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மருத்துவமனையின் மூத்த மருத்துவர்கள், விஜயேந்திராவுக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்தனர். மேலும், தவறுதலாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட மூத்த மருத்துவரை தனியாக எந்த அறுவை சிகிச்சையும் செய்யக் கூடாது என நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால் அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது பற்றி உறுதியாக தெரியவில்லை.
சுருஷ்ட்ரா டிராமா சென்டரில் இதுபோன்ற தவறுகள் நடப்பது ஒன்றும் புதிதல்ல என்கிறார்கள் டெல்லி மக்கள். ஏற்கனவே கடந்த 2012 ஆம் ஆண்டு, இதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நான்கு நோயாளிக்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தனர். இதையடுத்து, அப்போதைய டெல்லி அரசு சம்மந்தப்பட்ட மருத்துவர்கள் இரண்டு பேரை பணி நீக்கம் செய்ததுடன், ஒருவரை சஸ்பெண்ட் செய்தும், மற்றொருவரை பணியிட மாற்றம் செய்தும் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.