மதுபானம் வழங்கி வாக்கு சேகரிக்கும் காங்கிரஸ், பாஜக... வீடியோ ஆதாரத்துடன் கெஜ்ரிவால் புகார்
டெல்லி: டெல்லி சட்டசபைத் தேர்தலையொட்டி காங்கிரஸ், பாஜக உள்ளிட்டக் கட்சிகள் வாக்காளர்களுக்கு மதுபானங்கள் வழங்கி வாக்குச் சேகரிப்பதாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்.
நாளை காலை 8 மணிக்கு டெல்லி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ், பா.ஜனதாவுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் களத்தில் இறங்கியுள்ளது.
நாளை டெல்லித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்டக் கட்சிகள் வாக்காளர்களுக்கு மது வழங்கி வாக்குச் சேகரிப்பதாக வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளது.
ரகசிய கேமரா கண்காணிப்பு....
வாக்காளர்களுக்கு பணம் மற்றும் மதுபானங்களைக் கொடுத்து அரசியல் கட்சிகள் தவறான வழியில் வாக்கு சேகரிப்பதைக் கண்காணிக்கும் வகையில் ஆம் ஆத்மி கட்சியினர் சார்பில் டெல்லி குடிசை பகுதிகளில் அதிக திறன் வாய்ந்த 2 ஆயிரம் கேமிராக்களைப் பொருத்தியுள்ளனர்.
வீடியோ காட்சிகள்....
இதன்மூலம் டெல்லியில் உள்ள 70 தொகுதிகளில் நடைபெறும் தேர்தல் முறைகேடுகள் அவ்வப்போது, வீடியோ பதிவுகளாக கட்சித் தலைமைக்கு ஆம் ஆத்மி தொண்டர்களால் அனுப்பப் பட்டு வருகிறது.
மதுபாட்டில் காட்சிகள்....
அந்தவகையில், வாக்குச் சேகரிப்பதற்காக வாக்காளர்களுக்கு பிற கட்சியினர் மதுபாட்டில்கள் வழங்கும் காட்சிகளை வீடியோவாக எடுத்துள்ளனர் ஆம் ஆத்மி கட்சியினர். இந்த வீடியோ ஆதாரத்துடன் அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் புகார் ஒன்றைத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ், பாஜகவினர்...
அதில், காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சியினரே இவ்வாறான முறைகேடான செயல்களில் ஈடுபட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தேர்தல் அறிவிக்கப் பட்டதிலிருந்தே....
தற்போது ஆம் ஆத்மி சார்பில் இத்தகைய புகார் அளிக்கப் பட்டிருப்பினும், தேர்தல் தேதி அறிவிக்கப் பட்ட நாளில் இருந்து டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் தேர்தல் ஆணையம் சுமார் 1, 642 லி நாட்டுச் சாராயத்தையும், 7568லி சாராயம், 1லட்சம் குவார்ட்டர் அளவுள்ள மது பாட்டில்களையும் மற்றும் 2,651 அரை லிட்டர் சாராய பாட்டில்களையும் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.