விவசாயி தற்கொலை… நாடாளுமன்றத்தை கிடுகிடுக்க வைத்த எதிர்கட்சிகள்
டெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி பேரணியில் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்தது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதை அடுத்து லோக்சபா, ராஜ்யசபாவும் ஒத்திவைக்கப்பட்டன.
லோக்சபா இன்று காலையில் கூடியதும் விவசாயி தற்கொலை விவகாரம் குறித்து கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு உடனடியாக விவாதிக்கும் வகையில் ஒத்திவைப்பு தீர்மானம் கோரி காங்கிரஸ் கட்சி நோட்டீஸ் வழங்கியது. காங்கிரஸ் உறுப்பினர் கே.சி.வேணுகோபால் இந்த நோட்டீஸை லோக்சபா சபாநாயகரிடம் வழங்கினார்.
ஆனால் ஒத்திவைப்பு தீர்மான கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இடதுசாரி எம்.பி.க்கள் அவையில் இருந்து வெளிநடப்புச் செய்தனர். காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து அவையில் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

சபாநாயகர் வேண்டுகோள்
இதனால், அவையில் கடும் கூச்சல், குழப்பம் நிலவியது. அப்போது குறுக்கிட்டுப் பேசிய சபாநாயகர், "விவசாயி தற்கொலை சம்பவம் என்னை மிகவும் வேதனைப்படுத்தியுள்ளது. ஆனால், இங்கு விவசாயிகள் பிரச்சினை குறித்து யாருக்குமே அக்கறை இல்லை. இவ்விவகாரத்தை அரசியலாக்க முற்பட வேண்டாம்" என்றார். ஆனால் தொடர்ந்து அமளி நீடித்ததால்,லோக்சபாவை அரை மணி நேரம் ஒத்திவைத்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டார்.

விவாதத்துக்கு தயார்
நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேசும்போது, "விவசாயி தற்கொலை விவகாரம் குறித்து லோக்சபாவில் விரிவாக ஆலோசிக்க அரசு தயாராக இருக்கிறது. பருவம் தவறிய மழையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள விவகாரம் குறித்து அவையில் ஏற்கெனவே விவாதிக்கப்பட்டிருந்தாலும் விவசாயி தற்கொலை சம்பவம் தொடர்பாக மீண்டும் விவாதிக்க அரசு தயாராக இருக்கிறது" என்றார்.

பிரதமர் மோடி விளக்கம்
இதையடுத்து லோக்சபாவில் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளித்தார். அப்போது, பல ஆண்டுகளாக விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு வருவது கவலை அளிக்கிறது என்றார்.
டெல்லியில் விவசாயி கஜேந்திர சிங் தற்கொலை செய்து கொண்டது தேசத்தையே துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இது நீண்ட காலமாக இருக்கும் பிரச்னை. இதற்கு அனைவரும் ஒருங்கிணைந்தே தீர்வு காண வேண்டும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

திருப்தியில்லை
விவசாயி தற்கொலை தொடர்பாக லோக்சபாவில் பிரதமர் மோடி அளித்த பதில் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமரின் பேச்சு திருப்தி அளிக்கவில்லை என்றார். இது தொடர்பாக பிரதமரோ அல்லது உள்துறை அமைச்சரோ முறையான விளக்கம் அளிக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications