சுதந்திர தின ஸ்பெஷல்... மோடி பேச்சை ரசிக்க டெல்லியில் 4 மணி நேர இலவச பேருந்து சவாரி அறிவிப்பு
டெல்லி: சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடியின் பேச்சை நேரில் கேட்பதற்கு ஏதுவாக காலை 6 மணி முதல் 10 மணி வரை பேருந்துகளில் பொதுமக்கள் கட்டணமின்றி பயணம் செய்ய ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
வரும் வெள்ளியன்று 67வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. மத்தியில் பாஜக அரசு பதவியேற்றதற்குப் பின் வரும் முதல் சுதந்திர தினமாகையால் மத்திய அரசு டெல்லி சுதந்திர தின விழாவை சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடு செய்து வருகிறது.
அதன்படி, அன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை பேருதுகளில் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப் பட்டுள்ளது.
தேவையான பேருந்துகள்...
இதற்காக செங்கோட்டைக்கு வரும் மக்களை ஏற்றிக்கொண்டு வர போதுமான பேருந்து வசதிகளை டெல்லி போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது. இது குறித்து பேசிய டெல்லி போக்குவரத்து கழக செய்திதொடர்பாளர் ஆர். எஸ். மன்ஹாஸ், ‘ஆகஸ்டு 15ந் தேதியன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை பொதுமக்கள் அனைவரும் டெல்லி முழுவதும் கட்டணமின்றி செல்லலாம்' என்றார்.
மோடி உரை...
மேலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல் முறையாக டெல்லி செங்கோட்டையில் பேச உள்ள பிரதமர் மோடியின் உரையை பொது மக்கள் பார்க்கும் வண்ணம் 10000 இருக்கைகள் கொண்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
பள்ளி மாணாக்கர்கள்...
செங்கோட்டையின் வலது புறத்தில் பொது மக்கள் அமரும் வகையில் இவ்வசதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், மூவர்ண உடைகளில் 10000 பள்ளி மாணாக்கர்கள் அமரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு வசதிகள்...
மேலும், பாதுகாப்புக் காரணங்களுக்காக சுதந்திர தின விழாவை கண்டுகளிக்க வருபவர்கள் செல்போன், கேமரா, பைனாக்குலர், ஹேண்ட்பேக், ப்ரீப் கேஸ், சிகரெட் லைட்டர், ட்ரான்சிஸ்டர், டிபன் பாக்ஸ் மற்றும் தண்ணீர் பாட்டில் எடுத்துக்கொண்டு வர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.