டெல்லி பலாத்கார வழக்கு - மேலும் 2 குற்றவாளிகளின் தூக்குத் தண்டனை நிறுத்தி வைப்பு
டெல்லி: டெல்லி பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் இருவருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
2012ம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் இளம் மருத்துவ மாணவியை மிகக் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்தது ஆறு பேர் கொண்ட கும்பல். இதில் ஒருவர் இளம் சிறார் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். மற்ற ஐந்து பேர் மீதும் தனி நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களில் ராம்சிங் என்பவர் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார்.
மற்ற நான்கு பேரான முகேஷ், வினய் சர்மா, பவன், அக்ஷய் தாக்கூர் ஆகியோருக்கு தனி நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து நான்கு பேரும் டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடினர். ஆனால் அவர்களின் அப்பீல் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதை எதிர்த்து நான்கு பேரும் உச்சநீதிமன்றத்தை அணுகினர். இதை விசாரித்த உச்சநீதிமன்றம் நான்கு பேரில் இருவரின் தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இன்று மேலும் இருவரின் தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.
2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி 23 வயதான நிர்பயா என்ற புனை பெயர் கொண்ட அந்தப் பெண் மிகக் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் வீசப்பட்டார். அவரை கொடூரமாக பலாத்காரம் செய்த அக்கும்பல் இரும்பு கம்பியாலும் கொடூரமாக தாக்கியதில் படுகாயமடைந்த நிலையில் உயிருக்குப் போராடி வந்த அவர் சிங்கப்பூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 13 நாள் அவரது உயிர்ப் போராட்டம் நீடித்தது குறிப்பிடத்தக்கது.