தூக்கு தண்டனை: சமூக விரோத சக்திகளை நீதி தேவதையே தண்டித்திருக்கிறார்: ஷிண்டே
டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் 16ம் தேதி ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் 4 பேருக்கு விரைவு நீதிமன்றம் இன்று தூக்குத் தண்டனை விதித்தது.
இந்த தீர்ப்புக்கு நாடு முழுவதும் உள்ள சமூக ஆர்வலர்களும், பெண்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, நீதிமன்ற தீர்ப்பு திருப்தியளிக்கிறது என்றும், உயிரிழந்த பெண்ணிற்கும், அவரது குடும்பத்தாருக்கும் நியாயம் கிடைத்துள்ளது என்று கூறினார்.
நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தான் வரவேற்பு தெரிவிப்பதாக கூறிய அவர், நீதி தேவதையே நேரடியாக வந்து சமூக விரோத சக்திகளை தண்டித்துள்ளார் என்றார்.
நீதித்துறைக்கு எந்தவிதத்திலும் அழுத்தம் தர முடியாது என்று தெரிவித்த ஷிண்டே, இந்த தீர்ப்புக்கு எதிரான உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்றும் அவர் கூறினார்.