டெல்லி வீட்டுக்கு வாடகை ரூ.85000… முடியாட்டி காலி செய்யுங்கள்… கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ்!
டெல்லி: முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் வசிக்கும் காலத்துக்கு மாத வாடகையாக ரூ.85,000 செலுத்த வேண்டும் என்று அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
டெல்லி முதல்வராக இருந்த அரவிந்த கெஜ்ரிவால் கடந்த பிப்ரவரி மாதம் 14-ந் தேதி பதவியை ராஜினாமா செய்தார். அவர் முதல்வராக பதவி ஏற்றதும் மத்திய டெல்லி திலக்லேனில் உள்ள அரசு வீட்டில் குடியேறினார்.
அவர் பதவி விலகியதும் அரசு வீட்டை காலி செய்ய வேண்டும். இதற்கு அவருக்கு 15 நாள் கால அவகாசம் அளிக்கப்படும். இதனால் மார்ச் 1-ந் தேதி அவரை வீட்டை காலி செய்யுமாறு டெல்லி பொதுப்பணித்துறை சிறப்பு செயலாளர் நோட்டீஸ் அனுப்பினார்.
இந்த நிலையில் கெஜ்ரிவால் மகளின் பள்ளித் தேர்வை காரணம் காட்டி மேலும் 15 நாள் நீட்டிப்பு கேட்டு இருந்தார். அது முடிவடைந்த பின்னரும் கெஜ்ரிவால் வீட்டை காலி செய்யவில்லை. இதையடுத்து கெஜ்ரிவாலுக்கு கவர்னர் ஒப்புதலுடன் மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் வசிக்கும் காலத்துக்கு மாத வாடகையாக ரூ.85,000 செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இது பற்றி ஆம் ஆத்மி செய்தி தொடர்பாளர் கூறும்போது, கெஜ்ரிவால் தங்கி இருக்கும் காலத்துக்கு அதற்கு உண்டான வாடகையை செலுத்தி விடுவார் என்று கூறினார்.