'தற்காலிக நிம்மதி'.... சசிகலா புஷ்பாவை ஆக. 22 வரை கைது செய்ய டெல்லி ஹைகோர்ட் தடை!
டெல்லி: பாலியல் தொல்லைக்கு உடந்தையாக இருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பாவை வரும் 22-ந் தேதி வரை கைது செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
முதல்வர் ஜெயலலிதா என்னை அடித்தார் என ராஜ்யசபாவில் பேசி பிரளயத்தை கிளப்பியவர் சசிகலா புஷ்பா. இதனால் அதிமுகவில் இருந்து அவர் தூக்கிவீசப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து சசிகலா புஷ்பா மீது ஏராளமான புகார்கள் விஸ்வரூபமெடுத்தன. இதில் அவரது வீட்டில் வேலை பார்த்த பானுமதி, ஜான்சிராணி இருவரும் அதிர்ச்சிகரமான புகார்களைத் தந்தனர்.
முன் ஜாமீன்
சசிகலா புஷ்பாவின் கணவர், மகன் ஆகியோர் கொடுத்த பாலியல் தொல்லைகளுக்கு உடந்தையாக இருந்தார், நிர்வாணமாக மசாஜ் செய்ய சொன்னார் என்றெல்லாம் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி சசிகலா புஷ்பா குடும்பத்தினர் மனுத்தாக்கல் செய்தனர்.
தமிழக அரசு எதிர்ப்பு
இம்மனு மீது நேற்று விசாரணை தொடங்கியது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுப்பிரமணிய பிரசாத், டெல்லி உயர்நீதிமன்றம் இம்மனுவை விசாரிக்க முகாந்திரம் இல்லை என வாதிட்டார். அத்துடன் தமிழக அரசு தரப்பில் ஏற்கனவே கடந்த 8-ந்தேதி சசிகலா புஷ்பா குடும்பத்தினர் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. எனவே இந்த வழக்கை விசாரிக்க தேவை இல்லை என்றார்.
அதுவேற வழக்கு...
இதற்கு சசிகலா தரப்பு வக்கீல் சுதீர்நந்த்ரஜோக் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் தன்னுடைய வாதத்தில், தற்போது தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு புதிய புகார் மீதானது. எனவே சசிகலா புஷ்பா குடும்பத்தினருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
நீதிபதி எச்சரிக்கை
இதையடுத்து நீதிபதி, தமிழக அரசு வழக்கறிஞரிடம் நீதிமன்றத்துக்கு தவறான தகவல்களை தரவேண்டாம். இதற்காக பின்விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என எச்சரித்தார். பின்னர் இன்று வரை சசிகலா புஷ்பாவை கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இடைக்கால தடை
இன்று நடைபெற்ற விசாரணையில், வரும் 22-ந் தேதி வரை சசிகலா புஷ்பாவுக்கு எதிராக கைது உட்பட எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என உத்தரவிட்டார் நீதிபதி முக்தா குப்தா. அத்துடன் சசிகலா புஷ்பா முன்ஜாமீனுக்கு சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.