சேகர் ரெட்டியின் கூட்டாளி பரஸ்மல் லோதா ஜாமீனில் விடுதலை
சேகர் ரெட்டியின் கூட்டாளியான கொல்கத்தா தொழிலதிபர் பரஸ்மல் லோதாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
டெல்லி: மணல் மாபியா சேகர் ரெட்டியின் கூட்டாளியான கொல்கத்தா தொழிலதிபர் பரஸ்மல் லோதாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது.
போயஸ் கார்டனுக்கு நெருக்கமான, சென்னை தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீட்டில் கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அவரது வீட்டில் இருந்து ரூ. 147 கோடியும், 178 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் ரூ. 24 கோடிக்கு புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சிபிஐ போலீஸார் பதிவு செய்துள்ள முதல் வழக்கில், 6-ஆவது குற்றவாளியாக கொல்கத்தா தொழிலதிபர் பரஸ்மல் லோதாவையும் சேர்த்துள்ளனர். சேகர் ரெட்டிக்கு, புதிய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுத்த புகாரில் அவர் கைது செய்யப்பட்டார்.
அவரை, சென்னையில் வைத்து விசாரிக்கக் கோரி அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்ததையடுத்து, அதற்கு சிபிஐ நீதிமன்றம் அனுமதியளித்தது. மும்பை அமலாக்கத்துறையினர், பரஸ்மல் லோதாவை கடந்த ஜனவரி மாதம் சென்னைக்கு கொண்டு வந்தனர். அவரிடம் விசாரணை செய்யும் வகையில் காவலில் எடுக்க அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் அனுமதி கேட்டது. ஆனால் பரஸ்மல் லோதா, தரப்பில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, பரஸ்லால் லோதாவுக்கு, ஜனவரி 19 வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே லோதாவின் தாய் இறந்ததை அடுத்து அவருக்கு உச்சநீதிமன்றம் பரோல் கொடுத்தது. இந்நிலையில் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் பரஸ்மல் லோதா மனுதாக்கல் செய்தார். அந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட பரஸ்மலுக்கு ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தார்.