தகுதி நீக்கம் செய்யப்பட்ட 20 ஆம்ஆத்மி எம்எல்ஏக்கள் கதி என்ன? டெல்லி ஹைகோர்ட் நாளை விசாரணை
தகுதிநீக்க உத்தரவை எதிர்த்து 20 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தொடுத்த வழக்கு நாளை டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது
டெல்லி: ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 20 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவர்கள் வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு, 21 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை சட்டப்பேரவை செயலாளர்களாக நியமித்தது. இது சட்டத்திற்கு விரோதமான செயல் என பல கட்சிகள் அப்போதே கண்டனம் தெரிவித்திருந்தன.
இரட்டை பதவி முறைக்கு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியிகள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து இவ்விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. எம்எல்ஏக்கள் ஆதாயம் தரும் 2 பதவிகளை வகிப்பது அரசியலமைப்பு சட்டத்தை மீறிய செயல். எனவே, அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தேர்தல் ஆணையத்திடம் புகார்
இந்த புகாரை தேர்தல் ஆணையத்துக்கு குடியரசுத் தலைவர் அலுவலகம் சார்பாக அனுப்பிவைக்கப்பட்டது. இதனை விசாரித்த தேர்தல் ஆணையம், இரட்டை பதவிகளை அனுபவிக்கும் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 20 பேரையும் தகுதி நீக்கம் செய்யலாம் என குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைத்தது.
பரிந்துரையை ஏற்றார் குடியரசுத் தலைவர்
தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இரட்டை பதவிகளை அனுபவிப்பதாக கூறி ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 20 பேரை தகுதி நீக்கம் செய்ய உத்தரவு பிறப்பித்தார். இதனைத்தொடர்ந்து 20 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களும் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். 21 பேரில் ஏற்கனவே ஒருவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார் என்பது குறிப்பிடதக்கது
டெல்லியில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு
பதவி நீக்க உத்தரவை எதிர்த்து ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதில் தங்களை தகுதி நீக்கம் செய்வதற்கு முன் உரிய முறையில் சட்ட விதிகள் பரிசீலிக்கப்படவில்லை என்றும், விசாரணையும் நடத்தப்படவில்லை என்றும் அதனால் பதவி நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளனர்.
நாளை வழக்கு விசாரணை
ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த இந்த மனு மீதான விசாரணை நாளைக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பு சாதகமா வருமா அல்லது பாதகமாக வருமா என்று ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 20பேரும் பதற்றத்தில் உள்ளனர். இவர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டாலும் ஆம் ஆத்மி ஆட்சி உடனடியான பாதிப்பு ஏதுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.