2ஜி வழக்கில் சிபிஐ மேல்முறையீடு: ஆ.ராசா, கனிமொழி உள்பட 19 பேருக்கு டெல்லி ஹைகோர்ட் நோட்டீஸ்
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உள்பட 19 பேருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
Recommended Video
டெல்லி: 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 19 பேருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து அமலாக்கத் துறையும், சிபிஐயும் மேல்முறையீடு செய்ததை அடுத்து மேற்கண்டவாறு நடவடிக்கையை நீதிமன்றம் எடுத்துள்ளது.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி முறைகேடு செய்யப்பட்டதாக ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
சுமார் 6 ஆண்டுகள் நடந்த இந்த வழக்கு விசாரணையில் கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் 2ஜி வழக்கில் இருந்து அனைவரையும் விடுதலை செய்வதாக டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி தீர்ப்பளித்தார்.
சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உள்பட 19 பேரும் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கடந்த 19-ஆம் தேதி அமலாக்கத்துறை டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
அதைத் தொடர்ந்து நேற்றைய தினம் சிபிஐயும் மேல்முறையீடு செய்தது. இந்த இரு வழக்குகளும் இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது 2ஜி வழக்கில் புலனாய்வு அமைப்புகளால் குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா மற்றும் கனிமொழி உள்பட 19 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக இரு வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை மே 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இந்த வழக்கு சம்பந்தமாக பறிமுதல் செய்யப்பட்ட ரூ.233 கோடி மதிப்பிலான சொத்தை விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.