சசிகலா புஷ்பா தொடர்பான அவதூறு பதிவுகளை நீக்க பேஸ்புக், கூகுளுக்கு டெல்லி கோர்ட் உத்தரவு
டெல்லி: சசிகலா புஷ்பா தொடர்பான அவதூறு பதிவுகளை நீக்க வேண்டும் என பேஸ்புக் மற்றும் கூகுளுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சசிகலா புஷ்பா குறித்த அவதூறு புகைப்படங்கள் கடந்த 2016-ஆம் ஆண்டு சமூக வலைதளங்களில் வெளியாகின. இது முற்றிலும் மார்பிங் செய்யப்பட்டது என சசிகலா புஷ்பா மறுத்தார். எனினும் அவர் அதிமுகவில் நீக்கப்பட்டு அதிமுக மூத்த தலைவராக தாக்கப்பட்டு கொலை மிரட்டல்கள் எழுந்ததாகவும் நாடாளுமன்றத்தில் கண்ணீர் மல்க புகார் தெரிவித்தார்.
மேலும் கடந்த 2011-ஆம் ஆண்டு அவரது வீட்டில் பணிபுரிந்த வேலையாட்களை அவரது குடும்பத்தினர் பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாகவும் தகவல்கள் வெளியானது. எனினும் அவரை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. இதனால் அந்த வழக்கு தொடர்பான விசாரணையில் மட்டும் ஆஜராகி வந்தார்.
பதிவேற்றம்
இந்நிலையில் சசிகலா புஷ்பா டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தொடர்ந்தார். அதில் கடந்த 2016 செப்டம்பர் மாதம் என்னை ஒரு மர்மநபர் தொடர்பு கொண்டு சில போட்டோக்களையும் வீடியோக்களையும் இணையத்தில் பதிவேற்றம் செய்யவுள்ளதாக கூறினார்.
பதிவேற்றம் மிரட்டல்
இதனால் எனக்கு மன ரீதியிலான பிரச்சினை எழுந்தது. மேலும் நான் எம்பி பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால் என்னை பற்றி அவதூறான வதந்திகளை பரப்ப தொடங்குவதாக மிரட்டியதோடு மார்பிங் செய்யப்பட்ட சில படங்களையும் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதாக மிரட்டினார்.
நீக்க வேண்டும்
புகைப்படங்களின் உண்மைதன்மையை ஆராயாமல் சிலர் அதை சமூகவலைதளங்களில் பரப்பி கொண்டே வருகின்றனர். இது எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது. எனவே இந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் அதன் யூஆர்எல்லுடன் நீக்க வேண்டும் என தனது மனுவில் சசிகலா புஷ்பா குறிப்பிட்டுள்ளார்.
நீக்க உத்தரவு
அவதூறு போட்டோ, வீடியோ குறித்த யூஆர்எல்களை சசிகலா புஷ்பா தரப்பே நீதிமன்றத்தில் வழங்கியது. இந்த வழக்கை நீதிபதி யோகேஷ் கண்ணா நேற்று விசாரித்தார். அப்போது சம்பந்தப்பட்ட யூஆர்எல்-களை நிரந்தரமாக நீக்குமாறு பேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கை அடுத்த ஆண்டு ஜனவரி 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.