நிர்பயா வழக்கில் சிறார் குற்றவாளியின் விடுதலையை தடை செய்ய முடியாது- டெல்லி ஹைகோர்ட்
டெல்லி: நிர்பயா எனப்படும் ஜோதி சிங் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட இளம் குற்றவாளியின் சிறைத் தண்டனை சட்டப்படி முடிந்து விட்டதால் அவரது விடுதலையை தடுக்க முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் கூறி விட்டது. இதனால் அந்தக் குற்றவாளி திட்டமிட்டபடி டிசம்பர் 20ம் தேதி அதாவது நாளை மறுநாள் விடுதலை செய்யப்படுகிறார்.
ஜோதி சிங் கடந்த 2012ம் ஆண்டு இரவு மிகக் கொடூரமாக ஆறு பேர் கொண் கும்பலால் டெல்லியில் வைத்து ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பலாத்காரம் செய்த அந்தக் கும்பல் ஜோதி சிங்கை கொடூரமாக தாக்கவும் செய்தது. அவரது பிறப்புறுப்பில் இரும்புக் குழாயால் தாக்கியதால் அவரது உடல் உள்ளுறுப்புகள் மோசமாக சேதமடைந்தன. இதன் விளைவாக ஜோதி சிங் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த வழக்கி் கைது செய்யப்பட்ட ஆறு பேரில் ஒருவருக்கு மட்டும் அப்போது வயது 18. இதனால் இளம் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறார் நீதிமன்றத்தில் அவர் மீதான வழக்கு தனியாக நடத்தப்பட்டது. சிறார் சட்டத்தின் கீழ் அந்தக் குற்றவாளிக்கு அதிகபட்சமாக 3 ஆண்டு தண்டனை மட்டுமே கிடைத்தது. தற்போது அந்த சிறுவனின் தண்டனைக் காலம் முடிந்து விட்டதால் 20ம் தேதி விடுதலை செய்யப்படவுள்ளார்.
இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம், அந்த ஆறு பேரிலேயே இந்த சிறுவன்தான் ஜோதி சிங்கை மிக மோசமான முறையில் சிதைத்த நபர் ஆவார். இவர்தான் இரும்புக் குழாயால் கொடூரமாகத் தாக்கிய நபரும் கூட. இதனால் இந்த சிறுவனின் விடுதலையால் அனைவரும் பெரும் குமுறலுடன் உள்ளனர்.
இந்த நிலையில் சிறுவனின் தண்டனைக் காலம் முடிந்து விட்டதால் சட்டப்படி அவரை காப்பகத்திலேயே தடுத்து வைக்க முடியாது. விடுதலை செய்ய வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
முன்னதாக இதுதொடர்பாக சுப்பிரமணியம் சாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது. அதில், இது நிச்சயம் தீவிரமான பிரச்சினைதான். அதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் சட்டப்படி அந்த குற்றவாளியின் தண்டனை டிசம்பர் 20ம் தேதி முடிவடைகிறது. அதற்கு மேல் காப்பகத்தில் வைத்திருக்க இடமில்லை.
விடுதலைக்குப் பின்னர் அந்த சிறுவனின் மறு வாழ்வு குறித்து தீர்மானிக்கப்பட வேண்டும். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருடனும் ஆலோசிக்க வேண்டும் என்று கோர்ட் கூறி விட்டது.
தற்போது அநத் பாலியல் பலாத்கார குற்றவாளிக்கு வயது 21 ஆகிறது. விடுதலைக்குப் பின்னர் தையல் வேலையில் ஈடுபட விரும்புவதாக அவர் கூறியுள்ளார். அவரை தொடர்ந்த 2 வருடம் கண்காணிப்பில் வைக்க சட்டத்தில் இடம் உள்ளதாக தெரிகிறது. இருப்பினும் அது எப்படி மேற்கொள்ளப்படும் என்று தெரியவில்லை.
முன்னதாக ஜோதி சிங்கின் தாயார் ஆஷா தேவி இதுகுறித்துக் கூறுகையில், கோர்ட் எங்களைக் கைவிட்டு விட்டது. எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. எங்களது முயற்சிகள் பலிக்கவில்லை. அவன் சமூகத்திற்கே பெரிய மிரட்டல் ஆவான். அவனை விடுதலை செய்வதாக இருந்தால் அவனது முகத்தை வெளியுலகிற்குக் காட்ட வேண்டும். அவனை அம்பலப்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.