தொப்பி சின்னம் கேட்டு முறையிட்ட தினகரன்... உத்தரவிட டெல்லி ஹைகோர்ட் மறுப்பு!
ஆர்கே நகர் தேர்தலில் போட்டியிடும் தனக்கு தொப்பி சின்னம் ஒதுக்குமாறு டிடிவி. தினகரன் தொடர்ந்த வழக்கை விசாரிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
டெல்லி : ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் தினகரனுக்கு தொப்பி சின்னம் வழங்க உத்தரவிட வலியுறுத்தப்பட்டது. ஆனால் சின்னத்தை ஒதுக்க உத்தரவு பிறப்பிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இரட்டை இலை சின்னம் மதுசூதனன் அணிக்கு ஒதுக்கப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் சசிகலா, தினகரன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி கர் முன்பு விவாரணைக்கு வந்தது.
அப்போது டிசம்பர் மாதத்தில் நடைபெற இருக்கும் ஆர்கே நகர் இடைத்தேர்தலின் போது தங்களுக்கு தொப்பி சின்னத்தை ஒதுக்குமாறு தினகரன் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதற்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து தேர்தல் ஆணைய வழக்கறிஞரிடம் நீதிபதி கருத்து கேட்டார். தேர்தல் ஆணைய வழக்கறிஞர் இது குறித்து கூறுகையில் தொப்பி சின்னம் என்பது யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம், அந்த சின்னத்தை யாருக்கு ஒதுக்குவது என்று அந்த தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரி தான் முடிவு செய்ய முடியும் என்றார்.
இந்நிலையில் தொப்பி சின்னத்தை தினகரனுக்கு ஒதுக்குமாறு எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துவிட்டார். மேலும் இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்து வரும் நீதிபதி இந்திரஜித் கவுர் விடுப்பில் இருப்பதால் தான் இந்த வழக்கை விசாரித்ததாகவும், இனியும் இந்த வழக்கை தான் புதிதாக விசாரிக்க விரும்பவில்லை என்றும் கூறினார். இதனால் நீதிபதி இந்திரஜித் கவுர் அமர்வு முன்பு மீண்டும் வழக்கு விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.