தகுதி நீக்கம் செய்யப்பட்ட 20 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தொகுதிகளில் நோ இடைத்தேர்தல்: டெல்லி ஹைகோர்ட்
டெல்லி இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி ஹைகோர்ட் தடை விதித்துள்ளது
டெல்லி: - ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் புதிய திருப்பமாக டெல்லி இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி ஹைகோர்ட் தடை விதித்துள்ளது
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் மீது பாஜக மற்றும் காங்கிரஸ் இரட்டை ஆதாய பதவியை அனுபவிப்பதாக கூறி புகார் அளித்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் அவர்களின் பதவியை பறிக்க குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். இந்நிலையில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்குவதற்கு முன்னதாகவே ஆம் ஆத்மி டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
அப்போது தேர்தல் கமிஷனின் முடிவுக்கு இடைக்கால தடை பிறப்பிக்க மறுக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த பின்னர் பழைய மனுக்கள் ஆம் ஆத்மி தரப்பில் திரும்ப பெறப்பட்டு, புதிய மனுக்கள் அக்கட்சியின் தரப்பில் ஹைகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. சட்டவிதிகளை முறையாக பின்பற்றவில்லை, விசாரணை முன்னெடுக்கப்படவில்லை எனவே தகுதி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என ஆம் ஆத்மி தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்திற்கு எதிரான மனுக்களை விசாரணை செய்த ஹைகோர்ட் தகுதிநீக்கத்திற்கு எதிராக இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது. அதேநேரம், 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவித்தல், அதற்கான நடவடிக்கையில் இறங்குதல் போன்ற எந்தவிதமான நடவடிக்கைகளை எடுக்க கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு தடை விதித்தது.
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் மனுக்கள் தொடர்பாக தேர்தல் ஆணையம், மத்திய அரசு பதிலளிக்கவும் ஹைகோர்ட் உத்தரவிட்டு உள்ளது. ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வதற்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது தொடர்பான முழு தகவல்களையும் தெரிவிக்கவும் ஹைகோர்ட் தரப்பில் சம்மன் விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணை முடியும் வரை இடைத்தேர்தல் தொடர்பான எந்த அறிவிப்பை வெளியிடக்கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.