சுனந்தா புஷ்கர் மரணம்- எஸ்.ஐ.டி. விசாரணை கோரிய சு.சுவாமிக்கு டெல்லி ஹைகோர்ட் குட்டு- மனு டிஸ்மிஸ்!
சுனந்தா புஷ்கர் மர்ம மரணம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு விசாரணை கோரிய பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமியின் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று டிஸ்மிஸ் செய்தது.
டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் மனைவி சுனந்தா புஷ்கர் மர்ம மரணம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு விசாரணை கோரிய பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமியின் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று டிஸ்மிஸ் செய்தது.
2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் டெல்லி ஐந்து நட்சத்திர ஹோட்டலில் சுனந்தா புஷ்கர மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். சுப்பிரமணியன் சுவாமியின் மனு மீது இன்று விசாரணை நடத்தப்பட்டது.
நீதிபதிகள் முரளிதர், மேத்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இம்மனுவை விசாரித்து,. சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு பொதுநல நோக்கம் கொண்டதா? என கேள்வி எழுப்பினர். மேலும் நீதித்துறை நடைமுறைகளை அரசியல்வாதிகள் தங்களது சொந்த ஆதாயங்களுக்கு பயன்படுத்துவது தொடர்பாக நீதிமன்றங்கள் கவனமாக இருக்க வேண்டியதும் அவசியம் எனவும் சுட்டிக்காட்டினர்.
மேலும் இப்படி கூறுவதன் மூலம் அரசியல்வாதிகள் பொதுநலன் வழக்கு தாக்கல் செய்யக் கூடாது என்பது அர்த்தம் அல்ல. ஆனால் அரசியல்வாதிகள் மற்ற அரசியல் தலைவர்கள் மீது குற்றம்சாட்டும் போது நீதிமன்றங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை இது. சுப்பிரமணியன் சுவாமி பொதுநலனோடு தாக்கல் செய்யாமல் அரசியல் காரணங்களுக்காக மனுத் தாக்கல் செய்திருக்கிறார் என்றனர் நீதிபதிகள்.
இந்த விசாரணையின் போது டெல்லி போலீஸ் மற்றும் மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின், டெல்லி போலீசின் விசாரணையில் சசிதரூர் தலையிடுவதாக கூறுவதை சுப்பிரமணியன் சுவாமி கூறுவதை ஏற்க முடியாது என்றார்.
சுனந்தா புஷ்கர் மர்ம மரணம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு விசாரணை கோரிய பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமியின் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று டிஸ்மிஸ் செய்தது.