சசிகலா புஷ்பா எம்.பி.யை தவறாக சித்தரிக்கும் படங்களை நீக்க வேண்டும் - டெல்லி ஹைகோர்ட்
டெல்லி: சசிகலா புஷ்பா பற்றி தவறாக படம் வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமூகவலைத்தளங்களில் சசிகலா புஷ்பா எம்.பி.யை தவறாக சித்தரிக்கும் படங்களை நீக்க வேண்டும் என சசிகலா புஷ்பா வழக்கு தொடுத்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர் நிறுவனங்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுகவில் இருந்தவர் ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பா. திருச்சி சிவா உடன் டெல்லி விமான நிலையத்தில் ஏற்பட்ட தகராறு, ஜெயலலிதா அடித்தார் உயிருக்கு ஆபத்து என்று ராஜ்யசபாவில் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். இதனையடுத்து அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார் சசிகலா புஷ்பா.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி. மீது, அவரது வீட்டில் வேலை பார்த்த பானுமதி, ஜான்சி ஆகியோர் தூத்துக்குடி எஸ்.பி.யிடம் புகார் அளித்தனர். அதில் சசிகலா புஷ்பா, அவரது கணவர் மற்றும் மகன் உள்ளிட்டோர், தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்க கோரி சசிகலா புஷ்பா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றம், சசிகலா புஷ்பாவினை 6 வாரத்திற்கு கைது செய்வதற்கு தடையும், போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந்நிலையில் சசிகலா புஷ்பா புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள மகளிர் காவல் ஆய்வாளர் அன்னதாய், 300க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சசிகலா புஷ்பாவைப் பற்றிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களிலும், இணையத்தளங்களிலும் பரவின. இதனையடுத்து
தன்னை தவறாக சித்தரிக்கும் படங்களை நீக்க வேண்டும் என சசிகலா புஷ்பா வழக்கு தொடுத்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர் நிறுவனங்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சசிகலா புஷ்பா பற்றி தவறாக படம் வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.