பொய் மேல் பொய் ... காந்தி சமாதியில் பாவ மன்னிப்பு கேட்க பெண்ணுக்கு உத்தரவு!
டெல்லி: பொய்க்கு மேல் பொய்யாக சொன்ன ஆசிரியைக்கு, டெல்லி உயர்நீதிமன்றம் நூதன தண்டனை விதித்துள்ளது. ராஜ்காட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் சமாதியில் தினசரி குறைந்தது 4 மணி நேரத்திற்கு, ஒரு வாரத்திற்கு பாவ மன்னிப்பு கேட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று அவருக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தனது திருமணத்தை மறைத்து கோர்ட்டுக்குத் தவறான தகவலைக் கொடுத்ததுதான் இவர் செய்த குற்றம்.
இந்த ஆசிரியையின் பெயர் பாரா கத்தூன். இவர் டெல்லி மாநகராட்சிப் பள்ளியில் ஆசிரியையாக இருந்து வந்தார். இவரது கணவர் பெயர் ராகேஷ். இவர் கடந்த நவம்பர் 27ம் தேதி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு செய்தார்.
அதில், எனது மனைவி பாரா கத்தூன். நானும், அவரும் காதலித்து மணந்தவர்கள். ஆனால் இந்த திருமணத்தை பாராவின் குடும்பத்தார் அங்கீகரிக்கவில்லை. இந்த நிலையில் பாராவை என்னிடமிருந்து அவரது தந்தை பிரித்து தனது வீட்டில் அடைத்து வைத்துள்ளார். அவரை மீட்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதையடுத்து பாராவை ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி பாரா கோர்ட்டில் ஆஜரானார். அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில், எனக்கும், ராகேஷுக்கும் திருமணம் நடைபெறவில்லை. இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள புகைப்படங்கள், திருமண சான்றிதழ், முஸ்லீம் மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறியதாக கூறப்படும் சான்றிதழ் உள்ளிட்ட அனைத்துமே போலியானவை, சித்தரிக்கப்பட்டவை என்று அடித்துக் கூறினார்.
இதையடுத்து இதுகுறித்து விசாரணை நடத்த டெல்லி காவல்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில் பாரா திடீரென கோர்ட்டில் ஆஜராகி, தான் தவறான வாக்குமூலம் அளித்து விட்டதாகவும், அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் அவர் தெரிவித்தார்.
எனக்குச் சொல்லாமலேயே எனது திருமணம் குறித்த தகவலை ராகேஷ் வெளியிட்டதால் சமூக அளவில் தனக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டதாகவும், இதனால்தான் திருமணத்தை மறுத்து வாக்குமூலம் அளித்ததாகவும், இதை வேண்டும் என்றே செய்யவில்லை என்றும், கோர்ட் நடவடிக்கைகள், சட்டம் குறித்து தனக்கு போதிய ஞானம் இல்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்த விளக்கத்தை பரிசீலித்த நீதிபதிகள் கைலாஷ் கம்பீர், இந்தர்நீத் கெளர் ஆகியோர் அதை நிராகரித்து உத்தரவிட்டனர். மேலும் நீதிமன்றத்தை பாரா அவமதித்து விட்டதாகவும் அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக அவர் பிறப்பித்த உத்தரவில், ஒரு பள்ளி ஆசிரியைக்கு கோர்ட் குறித்தோ, சட்டம் குறித்தோ தெரியாது என்று கூறுவதை நம்ப முடியாது, ஏற்கவும் முடியாது.
அவரது மொத்த நடவடிக்கையுமே சந்தேகத்திற்கிடமாக உள்ளது. கண்டனத்துக்குரியதாக உள்ளது. பொய் மேல் பொய் சொல்லியுள்ளார் அவர். மேலும் தான் அளித்த தவறான தகவலை நியாயப்படுத்துவது போல பேசியுள்ளார். கோர்ட்டில் அளித்த சத்திப்பிரமாணத்தையும் அவர் மீறி விட்டார். இதை மன்னிக்கவே முடியாது.
கோர்ட்டை அவமதித்ததற்காக அவருக்கு ரூ. 2000 அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும், இந்தப் பணத்தை அவர் காந்தி டிரஸ்ட்டில் ஒரு வாரத்திற்குள் செலுத்த வேண்டும். மேலும் டிசம்பர் 21ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு, தினசரி குறைந்தது 4 மணி நேரம் அவர் பாவ மன்னிப்பு கேட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும்.
இதை அந்தப் பகுதி காவல் நிலையக் காவலர்கள் கண்காணிக்க வேண்டும். அமைதியான முறையில் அவரது பிரார்த்தனை இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
பொய் மேல் பொய் சொன்னால் இப்படித்தான்....