நீதிபதியை விமர்சித்து ட்வீட் போட்ட குருமூர்த்தி மீது ஹைகோர்ட் அதிருப்தி!
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கைதுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்த நீதிபதியை விமர்சித்த ஆடிட்டர் குருமூர்த்தி மீது டெல்லி ஹைகோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது.
டெல்லி : முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கைதுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்த நீதிபதியை விமர்சித்த ஆடிட்டர் குருமூர்த்தி மீது டெல்லி ஹைகோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது. நீதிபதி முரளிதர் ப.சிதம்பரத்தின் ஜூனியரா என்று குருமூர்த்தி பதிவிட்டிருந்த கருத்தே அதிருப்திக்குக் காரணம்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார். கார்த்தி சிதம்பரத்தை மார்ச் 20ம் தேதி வரை அமலாக்கத்துறை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து கடந்த 9ம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவு குறித்து துக்ளக் இதழின் ஆசிரியரும் பிரபல ஆடிட்டருமான குருமூர்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை விதித்து உத்தரவு பிறப்பித்த 2 நீதிபதிகளில் ஒருவரான முரளிதர் ப.சிதம்பரத்தின் ஜூனியரா என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
|
டெல்லி ஹைகோர்ட் விசாரணை
குருமூர்த்தியின் இந்த பதிவை தமிழக நீதிபதிகள் டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து இந்த விவகாரத்தை டெல்லி ஹைகோர்ட் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்தது.
மறைமுக அவமதிப்பு
குருமூர்த்தியின் பதிவு, விஷமத்தனமான, மறைமுக அவமதிப்பு என்று நீதிபதிகள் முரளிதர், ஐ.எஸ்.மேத்தா ஆகியோர் அதிருப்தி தெரிவித்தனர். எனினும் இருப்பினும், இப்போதைக்கு கோர்ட்டு அவமதிப்பு நோட்டீஸ் பிறப்பிக்க மாட்டோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
வழக்கறிஞர்களிடம் விளக்கம்
இதனிடையே குருமூர்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து அந்த கருத்தை நீக்கியுள்ளார். தமது முந்தைய பதிவு குறித்த விளக்கத்தையும் அவர் அளித்துள்ளார். அந்தப் பதிவில் குருமூர்த்தி கூறியுள்ளதாவது, நீதிபதி முரளிதரன் இரு தரப்பு வழக்கறிஞர்களையும் அழைத்து தான் ப.சிதம்பரத்தின் ஜூனியர் அல்ல என்று கூறி இருக்கிறார்.
பதிவை ஏற்கனவே நீக்கிவிட்டேன்
சமூக வலைதளங்களில் நீதிபதிகள் பற்றி தவறான செய்திகள் வெளிவருவது குறித்தும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். முரளிதரன் ப.சிதம்பரத்தின் ஜூனியரா என்று கேட்ட பதிவை நான் ஏற்கனவே நீக்கிவிட்டேன் என்றும் குருமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.