டெல்லியில் டெம்போ வேன் மோதி உயிருக்கு போரடியவரிடம் செல்போன் திருட்டு - டிரைவர் கைது
டெல்லி: தலைநகர் டெல்லியில் நேற்று அதிகாலை சாலையில் சென்றவர் மீது டெம்போ வேன் ஒன்று மோதிய விபத்தில் ஒன்றரை மணிநேரம் உயிருக்கு போரடிய அந்த நபரிடம் செல்போனை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. சிசிடிவியில் பதிவான காட்சிகள் மூலம் அந்த வேன் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி சுபாஷ் நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மாதிபுல்லுக்குதான் இந்த அவலம் நிகழ்ந்துள்ளது. மாதிபுல் காயமடைந்து ஒன்றரை மணி நேரமாக உயிருக்கு போராடிக் கொண்டிருந்த போது, 140 கார்கள், 82 இரு சக்கர வாகனங்கள், 182 மோட்டார் சைக்கிள்கள், 45 பாதசாரிகள் அவரை பார்த்துவிட்டு, கடந்து சென்றுள்ளனர்.
டெல்லியில் பரபரப்பான சாலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நபருக்கு ஒருவர் கூட முன் வரவில்லை. உயிருக்கு போராடிய மனிதரிடம் இருந்து ஒரு கொடிய மனம் படைத்த ஒருவர் செல்போனை திருடி விட்டு ஓடுகிறான். குறைந்த பட்சம் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கக் கூட யாருக்கும் மனம் வரவில்லை. கடைசியில் அதே இடத்தில் மாதிபுல் மரித்தும் போய் விட்டார்.
இந்த மனிதத் தன்மையற்ற காட்சிகள் அனைத்தும் சிசிடிவியில் பதிவான நிலையில், தற்போது இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோ காட்சிகளை வைத்து மோதிய வேன் டிரைவரை போலீசார் கைது கைது செய்துள்ளனர்.
தூக்கி எரியப்பட்ட மாதிபுல்
விபத்தில் உயிரிழந்த மாதிபுல், மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர். இவர் 4 குழந்தைகளின் தந்தை. கஷ்டப்பட்டு குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். இரவில் ஒரு வேலை. பகலில் ஒரு வேலை பார்த்து வந்துள்ளார். காலையில் ஆட்டோ ஓட்டியும் இரவில் வாட்ச்மேன் பணியும் பார்த்து வந்துள்ளார்.
ரத்த வெள்ளத்தில் போராட்டம்
வாட்ச்மேன் பணி முடிந்து நேற்று அதிகாலை 5.40 மணியளவில் வீட்டுக்கு போய்க் கொண்டிருக்கும்போதுதான் அவர் மீது டெம்போ மோதி உள்ளது. அந்த இடத்திலேயே சாலையில் சரிந்து விழுகிறார். டெம்போ டிரைவர், இறங்கி சற்று தூரமாகவே அவரை பார்த்துவிட்டு, தனது வாகனத்தில் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பதை பார்த்துவிட்டு, வாகனத்தைக் கிளப்பிக் கொண்டு போய் விடுகிறார்.
உதவாத மனிதர்கள்
இந்நிலையில் விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு காலை 7 மணியளவில் வந்தனர். ஆனால் அதற்குள் அதிகளவு ரத்த போக்கின் காரணமாக மதிபூல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
செல்போன் திருட்டு
ஒன்றரை மணி நேரமாக உயிருக்கு போராடிய ரிக்ஷா ஓட்டுநருக்கு உரிய நேரத்தில் முதலுதவி செய்திருந்தாலோ அல்லது மருத்துவமனையில் சேர்த்திருந்தாலோ அவர் உயிருடன் காப்பாற்றியிருக்க வாய்ப்பு உள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். மாதபுல் உயிருக்கு போராடி கொண்டிருக்கும்போது அவர் அருகே வந்த ஒரு நபர் அவரது செல்போனை எடுத்த போதாவது ஆம்புலன்ஸ்க்கு போன் செய்திருக்கலாம்-.
டிரைவர் கைது
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் டெம்போ வேன் டிரைவர் மற்றும் செல்போனை எடுத்துச்சென்ற நபர் ஆகிய இருவரையும் வலை வீசி தேடினர். விபத்து ஏற்படுத்திய டெம்போ வேன் டிரைவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மரித்து போன மனிதநேயம்
விலங்குகளுக்கு காட்டும் நேசத்தைக் கூட சக மனிதனுக்கு காட்டப்படுவதில்லை என்பதுதான் வேதனை. தலைநகர் டெல்லியில் ஒருவருக்கு கூடவா மனிதநேயம் இல்லை என்பதுதான் இப்போது அனைவரின் முன்பும் எழுந்துள்ள கேள்வி.