நுரையீரல் புற்றுநோயை தரும் காற்று மாசு! டெல்லி, கொல்கத்தாவில் அதிக பாதிப்பு
டெல்லி: சுற்றுச்சூழல் மாசு காரணமாக நுரையீரல் புற்றுநோய் உட்பட சில புற்றுநோய்கள் ஏற்பட காரணமாகின்றன என உலக சுகாதார நிறுவனத்தின் புற்றுநோய் கழகம் அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் 2010ஆம் ஆண்டு 2,23,000 பேர் நுரையீரல் புற்றுநோயால் உயிரிழந்துள்ளனர். அதிக சுற்றுச் சூழல் மாசடைந்த பகுதிகளில் வாழ்வோருக்கு நுரையீரல் புற்றுநோய் வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளதாகவும், மிக மோசமான சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் தொழிற்சாலைகளில் வேலை செய்வோருக்கும் இந்த ஆபத்து அதிகம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
மாசு அதிகம்
இந்தியாவில் டெல்லி, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் அதிக அளவில் காற்று மாசுபட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகள் அதிகம்
இதற்கு காரணம் பெருகி வரும் தொழிற்சாலைகளும், போக்குவரத்து நெரிசலும்தான் என்று கவலைப்படுகிறார் சுற்றுச்சூழல் ஆர்வலரும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் துறை இயக்குநர் சுனிதா நரேன்.
கொல்கத்தாவில்
சுற்றுச்சூழல் மாசு காரணமாக கொல்கத்தாவில் 2009 -11 ஆம் ஆண்டு கால கட்டங்களில் மட்டும் 20 வகையான புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் இதில் நுரையீரல் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 12 சதவிகிதம் பேர்.
டெல்லியில்
ஆண்டுதோறும் 13,000 புற்றுநோயாளிகள் டெல்லி மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெருவதாக ஏய்ம்ஸ் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. இதில் 10 சதவிகிதம் பேர் நுரையீரல் புற்றுநோயாளிகள்.
அசுத்தம் காரணம்
மாசடைந்த காற்றினை சுவாசித்துக் கொண்டு அசுத்தமான சுற்றுச்சூழலில் வாழ்வதே இதற்குக் காரணமாக அமைகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். புகையிலை, மது போன்றவைகளை அதிக அளவில் பயன்படுத்துபவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று எச்சரிக்கப்படும் இன்றைய சூழ்நிலையில் காற்று மாசு கூட புற்றுநோய்க்கு காரணமாகிறது என்று அச்சுறுத்துக்கிறது இந்த ஆய்வு முடிவு.