கெஜ்ரிவாலுடன் ஓயாமல் மோதி வந்த.. டெல்லி ஆளுநர் நஜீப் ஜங் ராஜினாமா!
டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
டெல்லி: டெல்லி மாநில துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.
டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் மோதுவதிலேயே அவரது காலம் கழிந்து கொண்டிருந்தது. இவர்கள் இருவருக்கும் இடையே டெல்லி அதிகாரிகளின் நியமனம் தொடங்கி அனைத்தும் விவகாரங்களிலும் மோதல் ஏற்பட்டுக் கொண்டே இருந்தது.
மத்தியில் ஆளும் பாஜகவின் பேராதரவு நஜீப் ஜங்கிற்கு இருந்ததால், அவர் டெல்லியின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை போட்டு தாக்கி எடுத்துக் கொண்டிருந்தார். இந்நிலையில், திடீரென தனது ராஜினாமா கடிதத்தை மத்திய அரசுக்கு துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், டெல்லி துணை நிலை ஆளுநராக இருந்த போது தனக்கான உதவிகளையும் ஒத்துழைப்பையும் அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். பின்னர், டெல்லியில் கவர்னர் ஆட்சி இருந்த போது ஒத்துழைப்பு நல்கிய டெல்லி மக்களின் ஒத்துழைப்பிற்கும் அன்பிற்கும் நன்றித் தெரிவித்தார்.
மேலும், கடந்த இரண்டாண்டுகளாக இணைந்து செயல்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் அவர் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
ராஜினாமாவிற்கு பின்னர், மீண்டும் தனது ஆசிரியர் பணியை தொடரப் போவதாக நஜீப் ஜங் தெரிவித்துள்ளார்.