நாடு முழுவதும் 21 லஷ்கர் தீவிரவாதிகள் ஊடுருவல்- தாக்குதல் அபாயம் குறித்து மாநிலங்களுக்கு எச்சரிக்கை
நாட்டின் முக்கிய நகரங்களில் 21 லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
டெல்லி: டெல்லி உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் 21 லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 21 பேர் டெல்லி, மும்பை, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. நாட்டின் முக்கிய நகரங்களில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உத்தரவின் பேரில் தாக்குதல் நடத்தும் சதித்திட்டத்துடன் இந்த தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அனைத்து மாநிலங்களும் உஷார் நிலையில் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகளின் முக்கிய இலக்காக டெல்லி இருக்கலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மெட்ரோ ரயில் நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், சுற்றுலா தலங்கள், நட்சத்திர ஹோட்டல்கள், ஷாப்பிங் மால்கள், மதவழிபாட்டுத் தலங்கள், விளையாட்டு மைதாங்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேகத்துக்குரிய வாகனங்கள், பொருட்களை முழுமையாக சோதிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் இருந்துதான் இந்த தீவிரவாதிகள் நாட்டின் பல பகுதிகளிலும் ஊடுருவியிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.