டெல்லி கேரளா பவனில் பசுமாட்டிறைச்சி பரிமாறுவதாக பொய் புகார் - இந்துசேனா நிர்வாகி கைது!
டெல்லி: கேரளா பவனில் பசு மாட்டிறைச்சி பரிமாறுவதாக பொய் புகார் கொடுத்த இந்துசேனா அமைப்பைச் சேர்ந்த விஷ்ணு குப்தா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி கேரளா பவனில் பசு மாட்டிறைச்சி பரிமாறப்படுகிறது; இதனால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று போலீசாருக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து கேரளா பவனுக்குள் நுழைந்து டெல்லி போலீசார் ரெய்டு நடத்தினர். இதற்கு கேரளா முதல்வர் உம்மன் சாண்டி, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
டெல்லியில் கேரளா எம்.பி.க்கள், பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் கேரளா பவனில் எருமை மாட்டிறைச்சிதான் பரிமாறப்படுவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் பசுமாட்டிறைச்சி பரிமாறுவதாக போலீசில் பொய் புகார் கொடுத்ததாக இந்துசேனாவைச் சேர்ந்த விஷ்ணு குப்தாவை டெல்லி போலீசார் இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர்.