நீதிபதிகளின் தொலைபேசி ஒட்டுகேட்பு... ஆதாரத்தை தர கேஜ்ரிவாலுக்கு டெல்லி போலீஸ் நெருக்கடி!
நீதிபதிகளின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறிய புகாருக்கு ஆதாரத்தை கோரியுள்ளது டெல்லி போலீஸ்.
டெல்லி: நீதிபதிகளின் தொலைபேசிகளை மத்திய அரசு ஒட்டுக் கேட்பதாக தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரத்தை தருமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி போலீஸ் கடிதம் அனுப்பியுள்ளது.
டெல்லி உயர்நீதிமன்றத்தின் 50ஆம் ஆண்டு பொன்விழா அண்மையில் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாக பிரதமர் மோடிக்கு முன்னிலையில் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
கெஜ்ரிவாலின் இப் பேச்சு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால் நீதித்துறைக்கு இதைவிட பெருத்த அவமானம் ஏதும் இல்லை என்ற ரேஞ்சிலும் கருத்து கூறப்பட்டது.
கெஜ்ரிவால் பேசி முடித்ததும் விழா மேடையில் பேசிய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், அவரது குற்றச்சாட்டை உடனடியாக மறுத்தார். ஊகத்தின் அடிப்படையில் கூறப்படும் குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது என்றும் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து சட்ட அமைச்சகம் அறிக்கையும் வெளியிட்டது. இந்நிலையில் இதுதொடர்பாக டெல்லி போலீஸ் கமிஷனர், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் அண்மையில் நடைபெற்ற டெல்லி உயர்நீதிமன்றத்தின் பொன் விழா நிகழ்ச்சியில், நீதிபதிகளின் தொலைபேசி பேச்சுகள் ஒட்டுக்கேட்கப்படுவதாக தாங்கள் குற்றம் சாட்டியிருந்தீர்கள். அவ்வாறு நீதிபதிகளின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டிருந்த்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே உங்கள் குற்றச்சாட்டு தொடர்பான ஆதாரங்களை காவல்துறைக்கு அளித்தால் அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அக் கடிதத்தில் டெல்லி போலீஸ் கமிஷனர் குறிப்பிட்டுள்ளார்.