பிரதமர் அலுவலகம் பெயரில் போலி வெப்சைட் நடத்தி பணம் வசூலித்த நபர் கைது!
டெல்லி: பிரதமர் அலுவலக வெப்சைட்டை போலியாக உருவாக்கி பலரிடம் பண மோசடியில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திரமோடி அலுவலகம் என்ற பெயரில் போலியாக ஒரு வெப்சைட் செயல்பட்டுவருவதாக டெல்லி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த வெப்சைட்டில், பிரதான் மந்திரி ஆதர்ஷ் யோஜனா என்ற திட்டத்தின் பெயரை பயன்படுத்தி, இளைஞர்களிடம் நிதி மோசடி நடந்துள்ளதும் போலீசார் கவனத்திற்கு வந்தது.
இதுகுறித்த விசாரணையில் மேற்கு வங்க மாநிலம் ஹவுராவை சேர்ந்த சுதிப்தா சட்டர்ஜி என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்தான், வெப்சைட் உருவாக்கத்தின் மூளையாக செயல்பட்டவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
வேலை தேடும் இளைஞர்களை கவருவும் வகையில், வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று இந்த வெப்சைட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதை நம்பி வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிப்போரிடம், முன்பணம் கொடுத்தால்தான் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறி, பணம் பறித்துள்ளனர், சட்டர்ஜி தலைமையிலான கும்பல்.
சுமார் 200க்கும் மேற்பட்டோர் இவர்களிடம் பணத்தை செலுத்தி ஏமாந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே போலி வெப்சைட்டை போலீசார் முடக்கியுள்ளனர்.