டெல்லி ரோமியோக்களுக்கு ஆப்படிக்க களம் இறங்கும் டெல்லி போலீஸின் பெண் படை!
டெல்லி: டெல்லியில் இனிப் பெண்களிடம் வாலாட்டினால் ஆண்களுக்கு அடி உதைதான் மிஞ்சும்.
ஏனெனில் பெண்களின் பாதுகாப்பு காரணங்களுக்காகவே பெண் போலீசார் படை கடினமான கராத்தே பயிற்சியை முடித்து களத்தில் இறங்கியுள்ளது.
ரோட்டோர ரோமியோக்களும், பெண்களின் பின்னால் அலையும் ஆண்களுக்கும் முகமெல்லாம் இனி மார்க்தான் மிஞ்சும் இந்த பெண் அதிகாரிகளால்.
தலைநகரில் அதிகரிக்கும் குற்றங்கள்:
டெல்லியில் சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. 2013 டிசம்பரில் இளம்பெண் ஒருவர் ஓடும் பஸ்சில் ஒரு கும்பலால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அதன்காரணமாக இறந்தும் போனார்.
பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை:
இதேபோல் கடந்த ஆண்டும் கால் டாக்சியில் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதையடுத்து டெல்லி யில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மாநகர போலீஸ் கமிஷனர் பஸ்ஸி அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
போலீசாருக்கு கராத்தே பயிற்சி:
டெல்லி போலீசில் பணியாற்றும் சில பெண்களை தேர்வு செய்து அவர்களுக்கு கராத்தே பயிற்சி கொடுக்கும் நடவடிக்கையை துவக்கினார். கராத்தேயில் "பிளாக் பெல்ட்" பெற்ற விஷால் ஜெய்ஸ்வால் என்பவர் கடந்த சில மாதங்களாக இந்த பெண் போலீசாருக்கு கடுமையான பயிற்சி அளித்தார்.
களத்தில் இறங்கும் பெண் புலிகள்:
பயிற்சி பெற்ற அனைத்து பெண் போலீசாரும் இதில் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து விரைவில் அவர்கள் களத்தில் இறங்கவுள்ளனர். போலீஸ் சீருடை இன்றி சாதாரண உடைகளில் பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் இவர்கள் ரகசியமாக கண்காணிப்பில் ஈடுபடுவர். பெண்களுக்கு தொல்லை தரும் நபர்களை கண்டறிந்து நடு ரோட்டிலேயே அவர்களை செமத்தியாக கவனித்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கு இழுத்துச் செல்வது தான் இவர்களின் பணி.
சவாலைச் சந்திக்கும் சார்லிஸ் ஏஞ்சல்ஸ்:
இதுகுறித்து தெரிவித்த பயிற்சியாளர் விஷால் ஜெய்ஸ்வால், "எதிர்பார்த்ததுக்கு மேலாகவே விரைவாகவும் சிறப்பாகவும் பயிற்சியை முடித்து விட்டனர். இந்த அதிரடிப் படைக்கு "சார்லிஸ் ஏஞ்சல்ஸ்" என பெயர் வைத்துள்ளோம்.
ரோமியோக்களுக்கு “செக்”:
2000 இல் இதே பெயரில் ஹாலிவுட்டில் ஒரு அதிரடி படம் வெளியானது. அதில் தனியார் துப்பறியும் நிறுவனத்தில் பணியாற்றும் மூன்று பெண்களின் அதிரடியான கராத்தே சாகசம் இடம் பெற்றிருக்கும். இதனால் டெல்லி பெண் போலீசாருக்கும் இந்த பெயரை சூட்டியுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.