நிருபர்களுடன் பேச முயன்ற யோகேந்திர யாதவை தரதரவென இழுத்துச் சென்ற டெல்லி போலீஸ்
டெல்லி: டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஆம் ஆத்மி தலைவர் யோகேந்திர யாதவ் செய்தியாளர்களிடம் பேச முயன்றபோது போலீஸார் பிடித்து தரதரவென இழுத்துச் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி போலீஸின் இந்த செயலுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லி போலீஸ், மத்திய அரசின் கீழ் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆம் ஆத்மியின் முக்கியத் தலைவராக திகழ்ந்தவர் யாதவ். பின்னர் அவருக்கும் கெஜ்ரிவாலுக்கும் இடையே கருத்து வேறுபாடு வெடித்ததால் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். தற்போது அவரும், பிரஷாந்த் பூஷனும் இணைந்து சுவராஜ் அபியான் என்ற அமைப்பைத் தொடங்கி நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா மாநில விவசாயிகளைத் திரட்டி டெல்லி எல்லையில் யாதவ் தலைமையில் போராட்டம் நடந்தது. டிராக்டர் பேரணியும் நடைபெற்றது. இருப்பினும் போலீஸார் அதைத் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் திரண்டு போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் போராட்டக் களத்திற்கு யாதவ் உள்ளிட்டோர் விரைந்து வந்து அதில் கலந்து கொண்டனர். அப்போது போலீஸார் நேற்று மாலை யாதவ் உள்ளிட்டோரைக் கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். இரவு முழுவதும் யாதவை போலீஸார் நாடாளுமன்றத் தெரு காவல் நிலையத்தில் வைத்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை காவல் நிலையத்தில் கூடிய செய்தியாளர்களிடம் பேசுவதற்காக வந்தார் யாதவ். அப்போது போலீஸார் திடீரென யாதவையும், அவரது ஆதரவாளர்களையும் பிடித்துத் தரதரவென இழுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்செயலுக்கு முதல்வர் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டில், போலீஸாரின் செயலுக்கு நான் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். யோகேந்திரஜிக்கு நடந்தது கடும் கண்டனத்துக்குரியது.
அவர்கள் அமைதியான முறையில்தான் போராடியுள்ளனர். அது அவர்களது அடிப்படை உரிமையாகும். அதைத் தடுப்பது சட்டப்பூர்வமான செயல் அல்ல என்று கூறியுள்ளார் கெஜ்ரிவால்.
இதற்கிடையே காவல் நிலையத்தில் போலீஸார் தன்னை அவதூறாகப் பேசியதாகவும், அடித்ததாகவும் டிவிட்டரில் கூறியுள்ளார் யோகேந்திர யாதவ். இதுதொடர்பாக கிழிந்த சட்டையுடன் அவரது புகைப்படமும் வெளியாகியுள்ளது.