டெல்லி எய்ம்ஸ் மாணவர் சரவணன் தற்கொலை வழக்கு.. தந்தையிடம் போலீஸ் விசாரணை
டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மாணவர் மாணவன் சரவணன் தற்கொலை வழக்கு தொடர்பாக அவரது தந்தை கணேசனிடம் விசாரணை நடத்தப்பட்டது.
டெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த தமிழக மாணவர் சரவணன் தற்கொலை வழக்கு தொடர்பாக அவரது தந்தை கணேசனிடம் விசாரணை நடத்தப்பட்டது.
திருப்பூர் கோபால் தெருவைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி யுவராணி. இவர்களது மகன் சரவணன். இவர், மதுரை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் பட்டம் படித்தார். பின்னர் மேல் படிப்புக்காக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்ந்தார்.
கடந்த ஜூலை 10-ஆம் தேதி அவர் தங்கியிருந்த அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்நிலையில் அவர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டதாக டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் தங்களது மகனின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் பெற்றோர் புகார் அளித்தனர்.
டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்த ரவின்பேரில் நடந்த மறுபிரேத பரிசோதனையில் கொலைக்கான சாத்தியக்கூறு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை கொலை வழக்குப்பதியப்படவில்லை. இதனையடுத்து மகனின் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சரவணனின் பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில் சரவணன் தற்கொலை வழக்கு தொடர்பாக டெல்லி மால்வியா காவல் நிலையத்தில் அவரது தந்தை கணேசனிடம் இன்று டெல்லி போலீஸார் விசாரணை நடத்தினர். இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர் தெரிவித்தனர்.