டெல்லியில் போராடிய தமிழக விவசாயிகள் மீது கொடூர தடியடி - கைது
டெல்லியில் ரிசர்வ் வங்கி முன்பு போராடிய தமிழக விவசாயிகள் மீது டெல்லி போலீஸ் கொடூர தடியடி நடத்தி கைது செய்துள்ளது.
டெல்லி: டெல்லியில் ரிசர்வ் வங்கியை முற்றுகையிட முயன்ற தமிழக விவசாயிகள் மீது டெல்லி போலீஸ் கொடூரமாக தடியடி நடத்தி கைது செய்துள்ளது.
விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக் கோரியும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 25 நாட்களாக போராடி வருகின்றனர். இன்று தங்களின் கைகளை அறுத்துக்கொண்டு போராட்டம் நடத்தினர்.
இதனிடையே விவசாயக் கடன் தள்ளுபடி என்பது வங்கிகளின் நேர்மையான கடன் கொள்கைக்கு எதிரானது என்றும், நேர்மையான முறையில் கடன் பெறுவதையும் இது பாதிக்கும் என்றும் உர்ஜித் பட்டேல் கூறியுள்ளார்.
உர்ஜித் பட்டேல்
விவசாயக் கடன் தள்ளுபடியால், வங்கிகளில் கடன் பெறுபவர்கள் எதிர்காலத்தில் அதை திருப்பிச் செலுத்துவதிலும் சிக்கல் ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உர்ஜித் பட்டேலின் கருத்துக்கு டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
விவசாயிகள் கண்டனம்
தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு, விவசாயிகள் நலனில் அரசுக்கோ வங்கிகளுக்கோ அக்கறையில்லை என்றும் குற்றம்சாட்டினார். இன்று உர்ஜித் பட்டேலை கண்டித்து தமிழக விவசாயிகள் இன்று ரிசர்வ் வங்கியை முற்றுகையிடப் போவதாகவும் அறிவித்தனர்.
கொடூர தடியடி
ரிசர்வ் வங்கி முன்பு போராடிய விவசாயிகள் ஆளுநர் உர்ஜித் பட்டேலுக்கு எதிராக முழக்கமிட்டனர். ரிசர்வ் வங்கியை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் மீது டெல்லி போலீசார் கொடூரமாக தாக்கினர்.
விவசாயிகள் கைது
கடந்த 25 நாட்களாக போராடிய விவசாயிகளை கொடூரமாக தாக்கிய டெல்லி போலீஸ் அவர்களை கைது செய்தது. அவர்களை மீண்டும் ஜந்தர் மந்தர் பகுதிக்கு கொண்டு வந்தது. விவசாயிகளை தாக்கி அவர்களை கைது செய்த சம்பவம் தமிழக விவசாயிகளிடையே அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.