டெல்லிக்கு தீவிரவாதிகள் குறி.. குடியரசு தின விழாவுக்கு முன்பாக தாக்கலாம் என்று எச்சரிக்கை!
டெல்லி: குடியரசு தின விழாவுக்கு முன்பாக டெல்லியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று மத்திய உளவுப் பிரிவு எச்சரித்துள்ளது.
இதையடுத்து டெல்லி மற்றும் அதைச் சுற்றிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதேபோல டெல்லிக்கு அருகில் உள்ள மாநிலங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கலந்து கொள்ளவுள்ளார். எனவே தீவிரவாத சதித் திட்டம் தொடர்பான தகவலை மத்திய அரசு சீரியஸாக எடுத்துக் கொண்டுள்ளது. அதேபோல எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாநிலங்களிலும் காவல்துறையினர் உஷாராக இருக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
லஷ்கர் இ தொய்பாவும், சிமி எனப்படும் இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பும் குடியரசு தின விழாக் கொண்டாட்டங்களை சீர்குலைக்க முயன்று வருவதாக ஏற்கனவே தகவல் உள்ளது. அமெரிக்க அதிபர் இந்தியாவில் இருக்கும்போது இந்தியாவுக்கு கடுமையான எச்சரிக்கையை தரும் வகையில் பெரும் நாச வேலைக்கு அவர்கள் முயலலாம் என்றும் கருதப்படுகிறது.
மேலும் ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் அமெரிக்கா தலையிட்டு வருவதை எதிர்க்கும் வகையில் ஒபாமாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் அவர் இங்கு வரும்போது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் முனையலாம் என்றும் நம்பப்படுகிறது.
டெல்லி மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலும் காவல்துறையினர் தற்போது உஷார்படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக டெல்லியை ஒட்டியுள்ள நகரங்களில் கண்காணிப்பும், பாதுகாப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வழக்கமாகவே குடியரசு தின விழா அணிவகுப்புக்கு மிக பலத்த பாதுகாப்பு அளிக்கப்படும். இந்த முறை ஒபாமா வருவதால் இந்த பாதுகாப்பு மேலும் பல மடங்கு அதிகரிக்கப்படவுள்ளது.
இருப்பினும் டெல்லிக்கு அருகில் எங்காவது ஒரு இடத்தில் தீவிரவாதத் தாக்குதல் நடந்தால் கூட அது மத்திய அரசுக்கும், நாட்டுக்கும் பெரும் தர்மசங்கடமாகி விடும் என்பதால் அண்டை மாநிலங்களையும் மத்திய அரசு உஷார்படுத்தியுள்ளது. மேலும் நாட்டின் பாதுகாப்புப் படையினரின் பலமும் கூட கேலிப் பொருளாகி விடும் என்பதால் அனைத்து வகையிலும் உஷாராக இருக்குமாறு பாதுகாப்புப் படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
சிமி அமைப்பு குறித்துத்தான் தற்போது இந்திய உளவு அமைப்புகள் கவனம் செலுத்தி வருகின்றன. இந்த அமைப்பின் ஐந்து முக்கியப் புள்ளிகள் தலைமறைவாக உள்ளனர். இந்த ஐந்து பேரும் மத்தியப் பிரதேச மாநிலம் கந்த்வா சிறையிலிருந்து தப்பியவர்கள் ஆவர். இவர்கள் மிகவும் பயங்கரமானவர்கள் என்று கூறப்படுகிறது. சென்னை சென்டிரல் ரயில் குண்டுவடெிப்பு மற்றும் சில திருட்டுச் சம்பவங்களில் இவர்களுக்குத் தொ\டர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
சிறையிலிருந்து தப்பிய பின்னர் இவர்கள் எந்தத் தாக்குதலிலும் ஈடுபடவில்லை என்று தெரிகிறது. ஆனால் குடியரசு தின விழாவின்போது இவர்கள் தாக்குதலில் ஈடுபட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. அதேபோல லஷ்கர் இ தொய்பா அமைப்பும் தனது வாய்ப்புக்காக காத்திருக்கிறது. இந்த அமைப்பு சீக்கியர்களை மீண்டும் தூண்டி தீவிரவாதப் பாதைக்குத் திருப்ப முயன்று வருவதாக கூறப்படுகிறது. டெல்லி மற்றும் பஞ்சாபை சீர்குலைக்கும் வகையிலான இந்த முயற்சிக்கு ஐஎஸ்ஐ முழு ஆதரவு தெரிவித்து செயல்பட்டு வருகிறது.
எனவே தற்போது உளவுப் பிரிவு விடுத்துள்ள தீவிரவாதத் தாக்குதல் வாய்ப்பு தொடர்பான எச்சரிக்கைச் செய்தி முக்கியத்துவம் பெறுகிறது.